திருச்சி அருகே விபத்தில் சிக்கிய பஸ் தாறுமாறாக ஓடி நிழற்குடைக்குள் புகுந்தது; பெயிண்டர் பலி


திருச்சி அருகே விபத்தில் சிக்கிய பஸ் தாறுமாறாக ஓடி நிழற்குடைக்குள் புகுந்தது; பெயிண்டர் பலி
x
தினத்தந்தி 11 Nov 2018 11:00 PM GMT (Updated: 11 Nov 2018 7:41 PM GMT)

திருச்சி அருகே விபத்தில் சிக்கிய பஸ் தாறுமாறாக ஓடி நிழற்குடைக்குள் புகுந்தது. இதில் பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.

சோமரசம்பேட்டை,

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள தேவாரத்திற்கு அரசு பஸ் ஒன்று நேற்று பகல் 12.20 மணி அளவில் புறப்பட்டு சென்றது. பஸ்சை தேவாரத்தை சேர்ந்த டிரைவர் முனியாண்டி (வயது 40) ஓட்டினார். பஸ்சில் மொத்தம் 63 பயணிகள் இருந்தனர். பஸ் திருச்சி ராம்ஜிநகர் மில்கேட் அருகே பகல் 12.40 மணி அளவில் திருச்சி-திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அந்த நேரத்தில், அப்பகுதியில் எட்டரை கிராமம் இந்திரா நகரை சேர்ந்த பெயிண்டரான மதுக்குமார் (42), பவித்ரன் (25), ராஜ மாணிக்கம் (30) ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் புங்கனூர் சாலையில் இருந்து, திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையை கடந்து மணிகண்டம் நோக்கி செல்ல முயன்றனர். அப்போது அரசு பஸ்சின் பக்கவாட்டில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் அடிப்பகுதியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக்கொண்டதால், மோட்டார் சைக்கிளும், அதில் வந்த 3 பேரும் தர, தரவென இழுத்து செல்லப்பட்டனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை பஸ் இழந்து தாறுமாறாக ஓடியது. இருப்பினும் டிரைவர் முனியாண்டி சுதாரித்துக்கொண்டு, சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் நோக்கி சென்ற பஸ்சை உடனடியாக அருகில் இருந்த பஸ் நிறுத்தம் நோக்கி திருப்பினார். அந்த நேரத்தில் அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திக்கொண்டு 2 பேர் பேசிக்கொண்டிருந்தனர். பஸ் வேகமாக வருவதை கவனித்த அவர்கள் உடனடியாக மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தலைதெறிக்க ஓடினர். ஒருசில நொடிகளில் பஸ் வேகமாக, பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்து, மேற்கூரையில் மோதி நின்றது. இதனை பார்த்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்து அபய குரல் எழுப்பினர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய வேகத்தில் இழுத்து செல்லப்பட்டதில் மதுக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். பவித்ரன், ராஜமாணிக்கம் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ராம்ஜிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மதுக் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான பஸ்சை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் பஸ் மோதிய வேகத்தில் பயணிகள் நிழற்குடை முழுவதும் இடிந்து சேதமடைந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்தன.

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது மோதியிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். ஆனால் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தால் திருச்சி-திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. இந்த விபத்து தொடர்பாக ராம்ஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்ததும் பொதுமக்கள் திரண்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story