மதுரையில் பயங்கரம்; 1,500 ரூபாய்க்காக நடந்த மோதல் வாலிபர் கொலையில் முடிந்தது


மதுரையில் பயங்கரம்; 1,500 ரூபாய்க்காக நடந்த மோதல் வாலிபர் கொலையில் முடிந்தது
x
தினத்தந்தி 13 Nov 2018 12:00 AM GMT (Updated: 12 Nov 2018 8:35 PM GMT)

1,500 ரூபாய் கடனுக்காக மதுரையில் நடந்த மோதலில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுரை,

மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. அவருடைய மகன் சதீஸ்குமார்(வயது 17). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு இவர் தனது ஊரை சேர்ந்த நண்பரான முத்து என்ற சூரியாவிடம் ரூ.1,500 கடனாக வாங்கியிருந்தார். அதன்பிறகு கடனை சதீஸ்குமார் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் தீபாவளி பண்டிகையையொட்டி சதீஸ்குமார் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது முத்து தனக்கு கொடுக்க வேண்டிய கடனை திரும்ப தருமாறு அவரிடம் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் நேற்று முன்தினம் இரவு சதீஸ்குமாரை முத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னை முத்து தாக்கியதாக நண்பர்களிடம் கூறியுள்ளார். அவர்களும் இதுகுறித்து கேட்பதற்காக சதீஸ்குமாரை அழைத்து கொண்டு தெற்குவாசல் பாலம் அருகில் சென்றனர். அங்கு முத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது சதீஸ்குமார், அவரது நண்பர்களை அழைத்து வருவதை பார்த்த முத்து ஆத்திரம் அடைந்தார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து பேசும்போது மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

அப்போது முத்துவும், அவரது நண்பர்களும் சேர்ந்து சதீஸ்குமாரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த சதீஸ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தெற்குவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கொலை செய்யப்பட்ட சதீஸ்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள முத்து, அவருடைய நண்பர்கள் கோபால், அண்ணாமலை, மோகன், மதியழகன் ஆகிய 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

1,500 ரூபாய்க்காக நடந்த மோதல் வாலிபரின் கொலையில் முடிந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story