மும்பையில் 10 சதவீதம் குடிநீர் வெட்டு : இன்று முதல் அமல்


மும்பையில் 10 சதவீதம் குடிநீர் வெட்டு : இன்று முதல் அமல்
x
தினத்தந்தி 14 Nov 2018 10:55 PM GMT (Updated: 14 Nov 2018 10:55 PM GMT)

ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைவு எதிரொலியாக மும்பையில் இன்று முதல் 10 சதவீத குடிநீர் வெட்டை மாநகராட்சி அமல்படுத்துகிறது.

மும்பை,

மோடக்சாகர், துல்சி, விகார், தான்சா, மேல் வைத்தர்ணா, கீழ் வைத்தர்ணா மற்றும் பட்சா ஆகிய 7 ஏரிகளில் இருந்து மும்பை நகருக்கு குடிநீர் கிடைக்கிறது. இந்த ஆண்டு மழைக்காலத்தின் போது மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஜூலை மாதம் கொட்டி தீர்த்த கன மழையின் காரணமாக துல்சி, மோடக் சாகர், விகார், தான்சா ஆகிய 4 ஏரிகள் அடுத்தடுத்து நிரம்பின.

தொடர்ந்து மும்பையின் குடிநீர் தேவையில் 50 சதவீத தண்ணீரை வழங்கும் பிரதான ஏரியான பட்சா ஏரியின் நீர் மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது.

5 ஏரிகள் நிரம்பியதன் மூலம் அடுத்த ஆண்டு பருவமழை வரையிலும் மும்பைக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வதில் எந்த சிக்கலும் ஏற்படாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செப்டம்பரில் எதிர்பார்த்த அளவுக்கு போதிய மழை பெய்யவில்லை.

இதன் காரணமாக, மழைக்கால முடிவில் மும்பை பெருநகரத்துக்கு ஒரு வருடத்துக்கு வினியோகிப்பதற்கு தேவையான தண்ணீர் இருப்பில் 8 சதவீதம் குறைவாக இருந்தது.

அப்போது, 7 ஏரிகளிலும் சேர்த்து தண்ணீர் இருப்பு 13 லட்சத்து 13 ஆயிரத்து 960 மில்லியன் லிட்டராக இருந்தது. ஆனால் குடிநீர் வெட்டு இல்லாமல் ஒரு ஆண்டு முழுவதும் குடிநீர் வினியோகம் செய்ய ஏரிகளில் 14 லட்சத்து 47 ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீர் இருப்பு இருக்க வேண்டும்.

அக்டோபர் மாதத்தில் அதிகரித்த வெயிலின் தாக்கம் காரணமாக ஏரிகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்தது. தற்போது, ஏரிகளில் சுமார் 11 லட்சம் மில்லியன் லிட்டர் தான் தண்ணீர் உள்ளது.

முந்தைய ஆண்டுடன் தற்போதைய நிலவரத்தை ஒப்பிடுகையில் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 15 சதவீதம் குறைவாக உள்ளது.

இந்த தண்ணீரை கொண்டு அடுத்த மழைக்காலம் வரையிலும் மும்பைக்கு சீராக தண்ணீர் சப்ளை செய்வது என்பது இயலாத காரியமாகும்.

எனவே அடுத்த மழைக்காலம் வரையிலும் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு மும்பை மாநகராட்சி 10 சதவீதம் குடிநீர் வெட்டை அமல்படுத்த முடிவு செய்தது. இந்த குடிநீர் வெட்டு இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

மும்பைக்கு தினமும் 4,200 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை என்ற நிலையில், தண்ணீர் வெட்டு மூலம் இனி தினமும் 3,800 மில்லியன் லிட்டர் மட்டும் வினியோகம் செய்யப்படும்.

இந்த குடிநீர் வெட்டு பிவண்டி, தானே, கல்யாண் நகரங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story