கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு 4 பேர் பலி வைரஸ், மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் சாவு


கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு 4 பேர் பலி வைரஸ், மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் சாவு
x
தினத்தந்தி 15 Nov 2018 11:15 PM GMT (Updated: 15 Nov 2018 6:21 PM GMT)

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு 4 பேர் பரிதாபமாக இறந்தனர். வைரஸ், மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகினர்.

கோவை,

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு, வைரஸ், பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் இந்த காய்ச்சல்களின் தாக்கம் குறைய வில்லை. மாறாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டு, பலர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து உள்ளனர்.

கோவை சாய்பாபாகாலனி கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் சிவராஜன் (வயது 52). இவர் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் காய்ச்சல் குறையவில்லை. அவரை பரிசோதித்து பார்த்த போது பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக நேற்று முன்தினம் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி கேத்தி அச்சனக்கல் பகுதியை சேர்ந்தவர் மிச்சியம்மாள் (60). இவர் கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் வசித்து வரும் தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் காய்ச்சல் குறையாததால் கடந்த 8-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் தீவிர சிகிச்சை பெற்று கேத்தி அச்சனக்கல் திரும்பினார்.

இந்தநிலையில் அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு கட்ட சோதனைகள் செய்த போது பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதை அறிந்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அவர் பரிதாபமாக இறந்தார்.

கூடலூர் அத்திப்பள்ளியை சேர்ந்தவர் பத்மாவதி (70). இவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

திருப்பூரை சேர்ந்தவர் ஆனந்த் (47). இவர் பன்றிக்காய்ச்சல் காரணமாக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நேற்று முன்தினம் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் டிக்கி (20). இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

கரூர் மாவட்டம் பள்ளபட்டியை சேர்ந்தவர் நிசார் அகமது (53). இவர் காய்ச்சல் காரணமாக நேற்று முன்தினம் மதியம் 2.30 மணியளவில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் 2.50 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இவர் மர்ம காய்ச்சலால் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது பன்றிக்காய்ச்சலுக்கு 37 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 6 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 89 பேரும் என மொத்தம் 132 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கடந்த 2 மாதத்தில் இதுவரை டெங்கு, வைரஸ், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி 66 பேர் பரிதாபமாக இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story