திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவையொட்டி விழுப்புரம், வேலூரில் இருந்து சிறப்பு ரெயில்கள் 2 நாட்கள் இயக்கம்


திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவையொட்டி விழுப்புரம், வேலூரில் இருந்து சிறப்பு ரெயில்கள் 2 நாட்கள் இயக்கம்
x
தினத்தந்தி 15 Nov 2018 10:30 PM GMT (Updated: 15 Nov 2018 9:29 PM GMT)

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவையொட்டி விழுப்புரம், வேலூரில் இருந்து 2 நாட்கள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

திருச்சி,

திருவண்ணாமலையில் நடக்க உள்ள கார்த்திகை தீப திருநாளையொட்டி, அங்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காகவும், கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்தை சமாளிப்பதற்காக விழுப்புரம், வேலூர் ஆகிய ஊர்களில் இருந்து 2 நாட்கள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. வருகிற 22-ந் தேதி மற்றும் 23-ந் தேதி காலை 10 மணிக்கு விழுப்புரம் சந்திப்பில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் வெங்கடேசபுரம், மாம்பலபட்டு, அய்யன்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், தண்டரை வழியாக திருவண்ணாமலைக்கு பகல் 12 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் பகல் 1 மணிக்கு புறப்படும் ரெயில் அதே வழித்தடத்தில் பிற்பகல் 2.45 மணிக்கு விழுப்புரம் சென்றடைகிறது.

மேலும் 22-ந் தேதி, 23-ந் தேதிகளில் இரவு 10 மணிக்கு விழுப்புரம் சந்திப்பில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் இரவு 11.40 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது. மறுமார்க்கமான திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் காலை 5.55 மணிக்கு விழுப்புரத்தை வந்தடைகிறது.

இதுபோல வேலூர் மார்க்கத்தில் இருந்து 22-ந் தேதி, 23-ந் தேதி ஆகிய நாட்களில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போலூர், அகரம், துரிஞ்சாபுரம் வழியாக இரவு 11.20 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும். மறுமார்க்கமான திருவண்ணாமலையில் 23-ந் தேதி, 24-ந் தேதி ஆகிய நாட்களில் அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரெயில் அதேவழித்தடத்தில் காலை 5.55 மணிக்கு வேலூர் சென்றடையும்.

இந்த சிறப்பு ரெயில்களில் 7 பொதுப்பெட்டிகள், ஒரு சரக்கு பெட்டி, பிரேக் வேன் என மொத்தம் 9 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story