மாமல்லபுரம் அருகே பஸ்-கார் மோதல் சென்னை சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் பலி


மாமல்லபுரம் அருகே பஸ்-கார் மோதல் சென்னை சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் பலி
x
தினத்தந்தி 15 Nov 2018 10:05 PM GMT (Updated: 15 Nov 2018 10:05 PM GMT)

மாமல்லபுரம் அருகே தனியார் பஸ்சும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மாமல்லபுரம்,

சென்னை எண்ணூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக நேற்று அதிகாலை கடலூர் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. சென்னையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு 50-க்கும் மேற்பட்டோர் அந்த பஸ்சில் சென்றனர். அதே சமயம் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி ஒரு கார் வந்தது.

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி என்ற இடத்தில் பஸ்சும், காரும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது.

காரில் பயணம் செய்த சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக் (வயது 21), பெரம்பூரை சேர்ந்த சாய் சதீஷ் (23), திலீப்குமார் (22), நேதாஜி (24), அமைந்தகரையை சேர்ந்த முகமது தகீம் (20) ஆகியோர் காருக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். கடலூரை சேர்ந்த பஸ் டிரைவர் ராகவன் (52) மற்றும் திருமண வீட்டை சேர்ந்த 15 பேர் காயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்புராஜ், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிரஞ்சீவி, சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார், தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று காரில் இறந்து கிடந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story