விக்கிரவாண்டி அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு


விக்கிரவாண்டி அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு
x
தினத்தந்தி 16 Nov 2018 10:30 PM GMT (Updated: 16 Nov 2018 5:14 PM GMT)

விக்கிரவாண்டி அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விக்கிரவாண்டி, 

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் ரிசர்வ் பாங்க் காலனியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30), பெயிண்டர். இவர் விக்கிரவாண்டி அருகே மதுரப்பாக்கம் புதுக்காலனியில் உள்ள உறவினர் செல்வி என்பவரின் வீட்டு கிரகப்பிரவேச விழாவில் கலந்துகொள்ள நேற்று முன்தினம் வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை பார்த்திபன், இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள ஏரிக்கரை பகுதிக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு ‘கஜா’ புயல் காரணமாக வீசிய பலத்த காற்றினால் அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்துவிட்டார்.

இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பார்த்திபன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசாரும் மற்றும் வருவாய்த்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story