தக்கலை அருகே ஆசிரியைக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து 9 பவுன் நகை பறிப்பு


தக்கலை அருகே ஆசிரியைக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து 9 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 17 Nov 2018 10:15 PM GMT (Updated: 17 Nov 2018 2:54 PM GMT)

தக்கலை அருகே ஆசிரியைக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து 9 பவுன் நகையை திருடி சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஆசிரியை ஒருவர் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று விடுமுறையில் ஊருக்கு பஸ்சில் புறப்பட்டார். அந்த பஸ்சில் அவருடன் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பக்கத்து இருக்கையில் பயணம் செய்தார். அந்த பெண் தானும் தக்கலை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர்தான் என தன்னை அறிமுகம் செய்து, ஆசிரியையிடம் சகஜமாக பழகினார். மேலும் பஸ் பயணத்தின் போது பிஸ்கட் போன்ற தின்பண்டங்கள் கொடுத்துள்ளார். அவற்றை ஆசிரியை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

இருவரும் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் வந்து இறங்கினர். அப்போது, இரவு நேரம் என்பதால் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் தக்கலை நோக்கி புறப்பட்டனர். செல்லும் வழியில் அந்த பெண்ணுக்கு பழக்கமான ஆண் ஒருவரும் ஆட்டோவில் ஏறினார்.

அவர்கள் தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதியில் சென்ற போது, அந்த பெண் ஆசிரியையிடம் டீ குடிப்போம் எனக்கூறி அருகில் இருந்த தனியார் விடுதிக்கு அழைத்து சென்றார். அங்கு ஆசிரியை உள்பட 3 பேரும் டீ குடித்தனர். அப்போது, ஆசிரியைக்கு டீ யுடன் மயக்க பிஸ்கட் கொடுத்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

மறுநாள் காலையில் ஆசிரியை விடுதியில் உள்ள ஒரு அறையில் கிடப்பதை உணர்ந்தார். மேலும், அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. அந்த பெண்ணையும், அவருடன் வந்த நபரையும் காணவில்லை. அவர்கள் அந்த நகையை பறித்து விட்டு ஓடிவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து ஆசிரியை தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணையும், அவருடன் வந்த நபரையும் தேடிவருகிறார்கள்.

Next Story