கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் சாவு


கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் சாவு
x
தினத்தந்தி 17 Nov 2018 10:00 PM GMT (Updated: 17 Nov 2018 7:08 PM GMT)

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் உயிரிழந்தார்.

கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூர் இ.பி.காலனியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). இவர் சென்னையில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சகிலா. இவர்களுக்கு ஆகாஷ் (17), அஜய் (16) ஆகிய 2 மகன்கள். கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆகாஷ் பிளஸ்-2 வகுப்பும், அஜய் பிளஸ்-1 வகுப்பும் படித்தனர்.

நேற்று முன்தினம் ‘கஜா‘ புயல் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் மாலையில் அஜய் தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து, பக்கத்து ஊரான ஆலம்பட்டி கண்மாய் அருகில் உள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.

குளித்துக் கொண்டு இருக்கும் போது எதிர்பாராதவிதமாக அஜய் கிணற்றில் தண்ணீரில் மூழ்கினார். உடனே அவருடைய நண்பர்கள் கூச்சலிட்டவாறு, அங்குள்ள பொதுமக்களிடம் சென்று தெரிவித்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிணற்றில் கயிறு கட்டி இறங்கி தேடினர்.

கிணற்றில் மூழ்கிய அஜயின் உடலை நேற்று அதிகாலையில் மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story