மோட்டார் சைக்கிளுடன் விழுந்த மெக்கானிக் பலி மாடுகுறுக்கே பாய்ந்ததால் விபரீதம்


மோட்டார் சைக்கிளுடன் விழுந்த மெக்கானிக் பலி மாடுகுறுக்கே பாய்ந்ததால் விபரீதம்
x
தினத்தந்தி 17 Nov 2018 10:45 PM GMT (Updated: 17 Nov 2018 7:21 PM GMT)

மணமேல்குடி அருகே மாடுகுறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த மெக்கானிக் பலியானார்.

மணமேல்குடி,

மணமேல்குடி உச்சயினி மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இப்ராம்சா (வயது 45). இவர் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காகவேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் வேலை விஷயமாக மணமேல்குடியிலிருந்து கோட்டைபட்டினத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் வேலையை முடித்துவிட்டு மீண்டும் மணல்மேல்குடிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து கொண்டிருந்தார்.

அம்மாப்பட்டினம் பிரிவுசாலையில் வந்தபோது, திடீரென்று மாடு ஒன்று ரோட்டின் குறுக்கே வந்தது. இதனால் அவர் மாடுமீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் பிடித்தார். இந்நிலையில் அவர் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் வேன் மூலம் மணமேல்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து மணமேல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .இறந்த இப்ராம்சாவிற்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

Next Story