மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 74 செ.மீ. மழைப்பொழிவு - விவசாய பயிர்கள் நாசம்; 9 வீடுகள் சேதம்


மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 74 செ.மீ. மழைப்பொழிவு - விவசாய பயிர்கள் நாசம்; 9 வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 17 Nov 2018 11:00 PM GMT (Updated: 17 Nov 2018 8:42 PM GMT)

மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 74.4 செ.மீ. மழை பெய்துள்ளது. மழைக்கு 9 வீடுகள் சேதம் அடைந்துள்ளதோடு, விவசாய பயிர்களும் நாசம் அடைந்தன.

தேனி,

‘கஜா‘ புயல் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. புயலின் தாக்கம் இருந்த 4 மணி நேரத்தில் மட்டும் 35 செ.மீ. மழை பெய்தது. தேனி மாவட்டத்தை புயல் கடந்து சென்ற பிறகும் மாவட்டத்தில் மழைப்பொழிவு இருந்தது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 74.4 செ.மீ. மழையளவு பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (சென்டி மீட்டரில்) வருமாறு:-

ஆண்டிப்பட்டி-6.4, அரண்மனைப்புதூர்-5.4, போடி-8.8, கூடலூர்-5.6, மஞ்சளாறு-8, பெரியகுளம்-8.8, சோத்துப்பாறை-5.2, உத்தமபாளையம்-4.3, வைகை அணை-6.5, வீரபாண்டி-6.8, தேக்கடி-4.9, முல்லைப்பெரியாறு-3.7 என மழை பெய்துள்ளது.

இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழையின் காரணமாக மாவட்டத்தில் 9 வீடுகள் இடிந்துள்ளன. தேனி ஆற்றங்கரைத் தெருவில் 2 வீடுகளின் சுவர்கள் இடிந்தன. ஆண்டிப்பட்டி பகுதியில் ஒரு வீடும், உத்தமபாளையம் தாலுகாவில் ஓடைப்பட்டி, லட்சுமிநாயக்கன்பட்டி, கோகிலாபுரம், தேவாரம் ஆகிய இடங்களில் தலா ஒரு வீடும், கோம்பையில் 2 வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.

வீடுகள் சேதம் அடைந்த இடங்களுக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று விவரங்களை சேகரித்தனர். தொடர்ந்து மாவட்டத்தில் வேறு எங்காவது வீடுகள் சேதம் அடைந்துள்ளதா? என கண்டறியும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர்.

பலத்த மழையால் மாவட்டத்தில் பல இடங்களில் விவசாய பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. தேவதானப்பட்டி பகுதியில் கரும்பு, வாழை, பருத்தி போன்ற பயிர்கள் சேதம் அடைந்தன. தேவதானப்பட்டி அருகில் உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் ராசு என்பவர் தோட்டத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்து இருந்தார். இவை காய்த்து பஞ்சு வெடிக்கும் பருவத்தில் இருந்தது. பலத்த மழையால் பருத்தி செடிகள் முறிந்து விழுந்து நாசம் அடைந்தன.

இதேபோல், பெரியகுளம் பகுதியில் கரும்பு, வாழை பயிர்களும், அகமலை பகுதியில் வாழை பயிர்களும் சேதம் அடைந்துள்ளன. கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகள் மற்றும் தேனி சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் நடந்து வந்தன. பலத்த மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

சத்திரப்பட்டி, வயல்பட்டி, உப்பார்பட்டி பகுதிகளில் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. வயல்வெளிகளில் தேங்கிய தண்ணீரில் சாய்ந்த நெற்பயிர்கள் மூழ்கின. இதனால், விவசாயிகள் தங்களின் வயல்களில் தண்ணீரை வடிகட்டும் பணியில் நேற்று ஈடுபட்டனர். மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் சாய்ந்த பயிர்களில் உள்ள நெல் முளைத்துவிட வாய்ப்பு உள்ளது.

இதனால், சத்திரப்பட்டி பகுதிகளில் விவசாயிகள் நெல் அறுவடை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். அறுவடை செய்த நெல் ஈரப்பதத்துடன் இருந்ததால் அவற்றை களத்தில் கொட்டி உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

சின்னமனூர் அருகே முத்துலாபுரம் பகுதியில் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. குன்னூர், அய்யனார்புரம் பகுதிகளில் கரும்புகள் சாய்ந்தன.

வீரபாண்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின. பலத்த காற்றினால் வாழை மரங்கள், மக்காச்சோள பயிர்கள் சேதம் அடைந்தன. போடேந்திரபுரம் அருகே உள்ள ஈஸ்வரன் கோவில் உள்ள வேப்பமரம் அடியோடு சாய்ந்தது. விவசாய பயிர்கள் சேதம் அடைந்த விவரங்களை சேகரிக்கும் பணியில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.


Next Story