சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அமைச்சர் வேண்டுகோள்


சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அமைச்சர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 18 Nov 2018 10:45 PM GMT (Updated: 18 Nov 2018 7:13 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் ஆர்.காமராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவாரூர்,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘கஜா’ புயலினால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களுக்கு ரூ.15 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பால், பிஸ்கட், போர்வை, பாய், பருப்பு, அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அனுப்பி வைத்து இருந்தார்.இந்த நிவாரண பொருட்கள் லாரிகள் மூலம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தது. இந்த நிவாரண பொருட்களை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பெற்று கொண்டு, உடனடியாக நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார். அப்போது கலெக்டர் நிர்மல்ராஜ் உடனிருந்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக அரசு ‘கஜா’ புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் பல்வேறு துறைகளை சேர்ந்த 6 ஆயிரத்து 426 பணியாளர்கள் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, மின்சாரத்துறையை சேர்ந்த பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் 205 நிவாரண முகாம்களில் 1 லட்சத்து 12 ஆயிரத்்து 251 பேர் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. வீடு, தென்னை மரங்கள் பாதிப்புகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களிலும் பொது வினியோகத்திட்டத்தின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் தொய்வின்றி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story