அமைச்சரை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் கார் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு


அமைச்சரை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் கார் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Nov 2018 11:00 PM GMT (Updated: 18 Nov 2018 7:31 PM GMT)

வேளாங்கண்ணி அருகே அமைச்சரை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கார் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டத்தில் கடந்த 15-ந் தேதி நள்ளிரவு புயல் காற்று வீச தொடங்கியது. விடிய, விடிய சுழன்றடித்த புயல் காற்றில் நாகை மாவட்டம் சிதைக்கப்பட்டு உள்ளது. கடலோர கிராமங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. வேளாங் கண்ணி அருகே உள்ள கன்னித்தோப்பு கிராமம் கடற்கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் ஒன்றாகும். இங்கு உள்ள மக்கள் புயலில் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள்.

இந்த கிராமத்தில் உள்ள கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. சேதங்களை பார்வையிடுவதற்காக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று அப்பகுதிக்கு சென்றார். அப்போது கிராம மக்கள் ஒன்று திரண்டு நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் வரவில்லை என கூறி அமைச்சரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அங்கு இருந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சருடன் வந்த கார் ஒன்றை அடித்து நொறுக்கினர். இதில் அந்த கார் முற்றிலும் சேதமடைந்தது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் அமைச்சரை மீட்டு பாதுகாப்பாக அழைத்து சென்றனர். கிராம மக்களின் திடீர் போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story