அதிகாரிகள் வந்த வாகனங்களுக்கு தீ வைப்பு எதிரொலி: பொதுமக்கள் மீது போலீசார் தடியடி; 80 பேர் கைது


அதிகாரிகள் வந்த வாகனங்களுக்கு தீ வைப்பு எதிரொலி: பொதுமக்கள் மீது போலீசார் தடியடி; 80 பேர் கைது
x
தினத்தந்தி 18 Nov 2018 11:00 PM GMT (Updated: 18 Nov 2018 7:49 PM GMT)

கீரமங்கலம் அருகே அதிகாரிகள் வந்த வாகனங்களுக்கு தீ வைப்பு எதிரொலியாக நேற்று பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் கஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மா, பலா, தென்னை, வாழை என்று பல்வேறு வகையான மரங்கள் பல்லாயிரக்கணக்கில் ஒடிந்து நாசமானது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் ஒடிந்து விழுந்ததில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் மின் இணைப்பு இன்றி கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன.

இவற்றை கணக்கெடுத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் யாரும் வராததால் வடகாடு, கீரமங்கலம், கொத்தமங்கலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பட்டுக்கோட்டை அறந்தாங்கி, புதுக்கோட்டை, பேராவூரணி சாலைகள் முற்றிலும் தடைபட்டுள்ளது. கீரமங்கலத்தில் சாலை மறியல் போராட்டம் இரவு, பகலாக தொடர்ந்தது. சாலையிலேயே சமையல் செய்து அங்கேயே சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த நிலையில் கொத்தமங்கலம் வழியாக கீரமங்கலம் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு அதிகாரிகள் 5 வாகனங்களில் சென்றனர். அந்த வாகனங்கள் கொத்தமங்கலத்தில் நிறுத்தப்பட்டபோது, பொதுமக்கள் அங்கு கூடினர். புயல் பாதிப்பால் மாவட்டம் முழுவதும் குறைந்த அளவிலேதான் மரங்கள் சாய்ந்ததாக அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் கிராமங்களுக்குள் வந்து பாருங்கள் என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அரசு அதிகாரிகள் மீது கல்வீசி தாக்கியதுடன் 5 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப் பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கல் வீச்சில் துணை போலீஸ் சூப்பிரண்டு அய்யனார் காயம் அடைந்தார். இதனால், செய்வதறியாது திகைத்த அதிகாரிகள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்கள் மூலம் வெளியேறினார்கள். அங்கு ஏற்பட்ட பதற்றம் காரணமாக கொத்தமங்கலத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் கொத்தமங்கலத்தில் சாலையில் கூடிநின்ற பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால், நாலாபுறமும் பொதுமக்கள் அலறியடித்தபடி சிதறி ஓடினார்கள்.

இந்த நிலையில் அரசு வாகனங்களை தீ வைத்து எரித்த குற்றத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் மீது நேற்று கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் 80 பேர் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டையில் உள்ள மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டனர்.

மேலும் கீரமங்கலம், கொத்தமங்கலம் பகுதியில் பொதுமக்கள், விவசாயிகள் கூடுவதை தடுக்கும் வகையில் அங்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கீரமங்கலம் பகுதியில் சாய்ந்து விழுந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணிக்காக சேலத்தில் இருந்து 15 மின்வாரிய ஊழியர்கள்வந்தனர். அவர்களுடன் கீரமங்கலம் மின்வாரிய ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் இணைந்து கீரமங்கலம் நகரப் பகுதிக்குள் உடைந்திருந்த மின்கம்பங்களை சீரமைத்து புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Next Story