போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சி: ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு


போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சி: ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2018 10:45 PM GMT (Updated: 18 Nov 2018 10:45 PM GMT)

கலபுரகியில் போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடியை நேற்று போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.

கலபுரகி,

கலபுரகி டவுனில் வசித்து வருபவர் பிரதீப். இவர் மீது கடத்தல், கொலை முயற்சி, கொள்ளை, கந்துவட்டி வசூலித்தது, போலீஸ்காரர்களை தாக்கியது உள்பட 19 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளன. கலபுரகி டவுன் ஆர்.ஜி.நகர் போலீஸ் நிலையத்தில் பிரதீப்பின் பெயர் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில், கலபுரகி புறநகர் கிரீன் நகர் அருகே பிரதீப் பதுங்கி இருப்பதாக நேற்று அதிகாலையில் அசோக் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர்.

இந்த வேளையில் போலீஸ்காரர்களை பார்த்த பிரதீப் தப்பித்து ஓடினார். அவரை போலீசார் விரட்டி சென்றனர். அவரை பிடிக்க முயன்ற போலீஸ்காரர்களான வெங்கடேஷ், தவ்சிப் மற்றும் பசவராஜ் ஆகியோரை பிரதீப் தாக்கிவிட்டு தொடர்ந்து ஓடினார்.

இதனால் போலீசில் சரண் அடையும்படி அசோக் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் எச்சரித்தார். ஆனால் பிரதீப் சரண் அடையாமல் தொடர்ந்து போலீசாரை தாக்க முயன்றார்.

இதனால் பாதுகாப்பு கருதி இன்ஸ்பெக்டர் ரமேஷ், ரவுடி பிரதீப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அப்போது பிரதீப்பின் காலில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் ஓட முடியாமல் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கலபுரகி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

மேலும், பிரதீப் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த போலீஸ்காரர்களான வெங்கடேஷ், தவ்சிப், பசவராஜ் ஆகியோரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story