புயல் பாதிப்புகளை பார்வையிட சென்ற அமைச்சர்களை, விவசாயிகள் முற்றுகை


புயல் பாதிப்புகளை பார்வையிட சென்ற அமைச்சர்களை, விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 19 Nov 2018 11:00 PM GMT (Updated: 19 Nov 2018 7:00 PM GMT)

ஒரத்தநாடு அருகே புயல் பாதிப்புகளை பார்வையிட சென்ற அமைச்சர்களை, விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

ஒரத்தநாடு,

கஜா புயல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக அமைச்சர்கள் செங்கோட்டையன், துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, உடுமலை ராதா கிருஷ்ணன், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், பாரதிமோகன் மற்றும் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாத்துரை உள்ளிட்ட அதிகாரிகளை கொண்ட குழுவினர் நேற்று தஞ்சையில் இருந்து காரில் புறப்பட்டு சென்றனர்.

இவர்கள் ஒரத்தநாட்டை அடுத்துள்ள குறுமண்தெரு அருகே சென்றபோது அங்கு திருமங்கலக்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகள் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட நிவாரணம் கிடைக்கவில்லை என்றும், குறிப்பாக சேதமடைந்த தென்னை மரங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரிகளும் கிராம பகுதிகளுக்கு வரவில்லை என்றும் கூறி அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தனர்.

அந்த நேரத்தில் அந்த வழியாக சென்ற அமைச்சர்களின் வாகனங்களையும் விவசாயிகள் வழிமறித்து முற்றுகையிட்டனர். அப்போது வைத்திலிங்கம் எம்.பி மற்றும் அமைச்சர்கள், மறியலில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் உங்களது கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதாக கூறினர்.

இதற்கு விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரமாக இருந்த தென்னை மரங்கள் உள்ளிட்டவை சேதமடைந்து விட்டதாகவும் இதனை அதிகாரிகள் யாரும் வந்துக்கூட பார்க்கவில்லை என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்களை விவசாயிகள் முற்றுகையிட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து மறு முனையில் பெரும்பாலான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை கொண்ட குழுவினர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருமங்கலக்கோட்டை பகுதியின் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Next Story