வீரபோயர் இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்


வீரபோயர் இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Nov 2018 10:30 PM GMT (Updated: 19 Nov 2018 7:36 PM GMT)

வீரபோயர் இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

தர்மபுரி,

வீரபோயர் இளைஞர் பேரவை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பேரவை மாநில துணைத்தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் சின்னப்பன் முன்னிலை வகித்தார். பேரவையின் மாநில தலைவர் சிவசாமி, பொதுசெயலாளர் அருள், பொருளாளர் பாலச்சந்திரன், செயலாளர் முருகேசன், தேசிய நிர்வாகி வெங்கடேஷ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

சீர் மரபினர் நலவாரியத்திற்கான உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈஸ்வரய்யா கமிஷன் பரிந்துரைப்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை பிரித்து சீர்மரபின பிரிவினருக்கு 10 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மத்திய அரசு சீர்மரபின மாணவ-மாணவிகளுக்கு வழங்கி வரும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழகத்திலும் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சீர்மரபினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story