திருமணம் செய்ய மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய காதலன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி


திருமணம் செய்ய மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய காதலன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 19 Nov 2018 11:00 PM GMT (Updated: 19 Nov 2018 8:19 PM GMT)

திருவொற்றியூரில் திருமணம் செய்ய மறுத்த பெண்ணை வீடு புகுந்து கத்தியால் குத்திய வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவொற்றியூர்.

திருவொற்றியூர் சாத்துமா நகர் காந்தி நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மகள் பாரதி (வயது 25) ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தார்.

மேடவாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி (28). பட்டதாரியான இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். பாலாஜி மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக வந்தபோது, பாரதிக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், முதலில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சமாதானம் அடைந்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இந்தநிலையில் பாலாஜி அடிக்கடி மது குடித்துவிட்டு பாரதியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. மேலும் பாரதியை யாருடனும் பேசக்கூடாது என்றும் கூறி தகராறு செய்துள்ளார். இதனை அறிந்த பாரதியின் பெற்றோர் பாலாஜிக்கு தங்கள் மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டனர். பாரதியும் திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

இந்த நிலையில் பாரதியின் தந்தை மற்றும் குடும்பத்தினர் தண்டையார்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு நேற்று முன்தினம் இரவு சென்றனர். உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் தாயுடன் பாரதி வீட்டில் இருந்தார்.

இதனை அறிந்த பாலாஜி, குடி போதையில் பாரதியின் வீட்டிற்கு சென்றார். அங்கு பாரதியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி உள்ளார். ஆனால் குடிப்பழக்கம் உள்ள உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறி பாரதி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலாஜி, சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து பாரதியின் கழுத்தில் ஓங்கி குத்தினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் பாரதி துடிதுடித்து கீழே சாய்ந்தார். காதலி இறந்து விட்டார் என்று நினைத்த பாலாஜி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதனையடுத்து அங்குள்ள மதுக்கடைக்கு சென்று மதுவுடன் தான் வாங்கி வைத்திருந்த விஷத்தை கலந்து குடித்துள்ளார்.

பின்னர் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்திற்கு சென்ற அவர், அங்கிருந்த போலீசாரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் பாலாஜியை, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வீட்டில் கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த பாரதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story