3 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம்: கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


3 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம்: கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 20 Nov 2018 9:45 PM GMT (Updated: 20 Nov 2018 5:40 PM GMT)

3 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

தேனி,

போடி அருகே உள்ள சிலமலை நடுத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 39). கூலித்தொழிலாளி. இவர், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தெருவில் விளையாடிக் கொண்டு இருந்த 3 வயது பெண் குழந்தையை தனது வீட்டுக்குள் தூக்கிச் சென்றுள்ளார். வீட்டுக்குள் வைத்து அந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்து அந்த குழந்தையின் தந்தை, போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக் கில் நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு, தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி திலகம், 3 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த நடராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

மேலும், நீதிபதி தனது தீர்ப்பில், ‘3 வயதே நிரம்பிய பெண் குழந்தை என்பதால், நடராஜனின் இந்த செய்கையால் மிகுந்த கலவரத்தையும், மன கஷ்டத்தையும், மன குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதனால், ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து நடராஜனை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story