திருக்குவளையில் கஜா புயலில் சேதம் அடைந்த கருணாநிதி பிறந்த வீடு


திருக்குவளையில் கஜா புயலில் சேதம் அடைந்த கருணாநிதி பிறந்த வீடு
x
தினத்தந்தி 20 Nov 2018 11:00 PM GMT (Updated: 20 Nov 2018 6:54 PM GMT)

திருக்குவளையில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த வீடு கஜா புயலில் சேதம் அடைந்து உள்ளது.

திருவாரூர்,

நாகை மாவட்டம், திருக்குவளையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த வீடு உள்ளது. அந்த வீடு முத்துவேலர்-அஞ்சுகம் அம்மையார் நினைவு நூலகமாக கருணாநிதி உயிரோடு இருந்தபோதே மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த வீட்டில் கருணாநிதியின் தந்தை முத்துவேலர், தாய் அஞ்சுகத்தம்மாள் ஆகியோரின் உருவ சிலைகள், கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு, அவருடைய பழைய நினைவுகளை கூறும் அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இதனால் இந்த வீட்டை தி.மு.க.வினர் போற்றி பாதுகாத்து வருகின்றனர்.

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக இன்று பல்வேறு வடிவில் கட்டிடங்கள் முளைத்து வரும் நிலையில், இன்றும் பழமை மாறாமல் அந்த ஓட்டு வீடு பராமரிக்கப்பட்டு நினைவு சின்னமாக போற்றப்படுகிறது. அவர் உயிரோடு இருந்த காலத்திலும், அவருடைய மறைவுக்கு பின்னரும் தி.மு.க.வினர் மட்டும் அல்லாது பொதுமக்களும் அந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கஜா புயலின் தாக்கத்தில் இந்த வீடும் தப்பவில்லை. இதில் கருணாநிதி பிறந்த வீட்டின் அருகில் இருந்த தென்னை மரம் ஒன்று வீட்டின் மீது விழுந்தது. வீட்டுக்கு முன்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த ‘நூலகம்’ என்ற வாசகம் அடங்கிய பெயர் பலகை மரம் விழுந்ததில் சேதமடைந்தது. மேலும் சூறாவளி காற்றினால் வீட்டின் ஓடுகளும் உடைந்தன.

இந்த தகவலை அறிந்த கருணாநிதியின் குடும்பத்தினர் மிகுந்த கவலை அடைந்ததுடன், உடனடியாக சேதம் அடைந்த பகுதிகளை சீரமைக்குமாறு கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், கருணாநிதி பிறந்த வீட்டை உடனடியாக சீரமைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story