கஜா புயல் பாதித்த பகுதிகள் 30 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது டி.டி.வி. தினகரன் பேட்டி


கஜா புயல் பாதித்த பகுதிகள் 30 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 20 Nov 2018 11:00 PM GMT (Updated: 20 Nov 2018 7:03 PM GMT)

கஜா புயல் பாதித்த பகுதிகள் 30 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது என மன்னார்குடியில், அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

சுந்தரக்கோட்டை,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் தினகரன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேவர் காலனி, அந்தோணியார் கோவில் தெரு, கீழ்ப்பாலம் ஆகிய பகுதிகளில் புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டெல்டா மாவட்டம் கஜா புயலின் கோரப்பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்துள்ளது. இந்த புயலால் இப்பகுதியில் 100 சதவீத கீற்று வீடுகளும், 90 சதவீத ஓட்டு வீடுகளும், கான்கிரீட் வீடுகளின் மேல் போடப்பட்டிருந்த கூரைகளும் பெருமளவு பாதித்துள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்களை மக்கள் அனுமதிக்காத நிலையில், மாவட்ட கலெக்டர் முதல் கிராம நிர்வாக அதிகாரிகள் வரை எந்த அரசு அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

கைத்தறித்துறை அமைச்சர் உள்ள பகுதியில் உடைகளுக்கு வழியின்றியும், உணவுத்துறை அமைச்சர் இருக்கும் பகுதியில் அப்பகுதி மக்கள் உணவின்றியும் தவிக்கிறார்கள். கஜா புயல் பாதிப்புகளால் இப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை 30 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது. நிவாரண தொகைக்கு ஆயிரம் கோடி ரூபாய் என்பது போதாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அ.ம.மு.க. பொருளாளர் ரெங்கசாமி, திருவாருர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story