சேவூர் அருகே இறந்தவரின் உடலை குளத்தை கடந்து கொண்டு செல்லும் அவலம்


சேவூர் அருகே இறந்தவரின் உடலை குளத்தை கடந்து கொண்டு செல்லும் அவலம்
x
தினத்தந்தி 20 Nov 2018 11:00 PM GMT (Updated: 20 Nov 2018 8:09 PM GMT)

சேவூர் அருகே இறந்தவரின் உடலை குளத்தை கடந்து கொண்டு செல்லும் அவலம் உள்ளது.

சேவூர்,

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த சேவூர் அருகே தண்டுக்காரன்பாளையம் ஊராட்சியில் ராமியாம்பாளையம் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இந்த காலனியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு மயான வசதி இல்லை.

இதனால் இந்த காலனியில் இறப்பவர்களை, முறியாண்டம்பாளையம் ஊராட்சி சூரிப்பாளையம் குளத்தின் கரையில் அடக்கம் செய்து வருகிறார்கள். எனவே மயானத்திற்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சதீஸ் (வயது 29) என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து அவருடைய உடலை பாடையில் வைத்து சூரிப்பாளையம் குளத்தின் கரைக்கு எடுத்து சென்றனர். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக சூரிப்பாளையம் குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்த தண்ணீர் வழியே சதீசின் உடலை கொண்டு சென்றனர்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதி மக்களுக்கு வேறு இடத்தில் மயானத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். மேலும் குளத்தின் கரையை பலப்படுத்த வேண்டும். அத்துடன் மயானத்திற்கு செல்ல நிரந்தர பாதை வசதி அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story