ஈரோட்டில் மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் - த.மா.கா. கூட்டத்தில் தீர்மானம்


ஈரோட்டில் மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் - த.மா.கா. கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 20 Nov 2018 11:15 PM GMT (Updated: 20 Nov 2018 10:36 PM GMT)

ஈரோட்டில் மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று த.மா.கா. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மத்திய மாவட்ட ஆலோசனை கூட்டம் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் மாநாட்டில் ஈரோட்டில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு சென்று கலந்துகொள்வது.

கஜா புயல் தாக்குதல் காரணமாக புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால், அங்கு குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டு வரும் மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் தாக்குதல் அதிகமாக இருப்பதால் அனைத்து அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட வேண்டும். சித்தோடு, லட்சுமிநகர் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய இணைப்பு சாலை சேரும் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் கட்ட வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கட்சியின் விவசாய பிரிவு மாவட்ட தலைவர் சம்பத்குமார், மண்டல தலைவர்கள் மணியன், சின்னசாமி, பொதுச்செயலாளர்கள் நாகநாதன், ரபீக், வட்டார தலைவர்கள் ரகுபதி, புவனேஸ்வரன், செய்தி தொடர்பாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Next Story