இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறைதண்டனை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு


இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறைதண்டனை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 20 Nov 2018 11:13 PM GMT (Updated: 20 Nov 2018 11:13 PM GMT)

இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வாலிபருக்கு 10 சிறைதண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சேலம்,

மேட்டூர் காவிரிபாலம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் பிரசாந்த் (வயது 26). வீரபாண்டிய கட்டபொம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவருடைய மகள் கிருத்திகாவுக்கும் (18), பிரசாந்திற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இவர்கள் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கிருத்திகா, பிரசாந்திடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறினார். அதற்கு அவர் நான் எனது உறவினர் ஒருவரின் மகளை திருமணம் செய்து கொள்ள போவதாகவும், உன்னை திருமணம் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார். இதைக்கேட்டு மனம் உடைந்த கிருத்திகா வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பின்னர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கிருத்திகா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மாதேஸ்வரன் மேட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பிரசாந்த், அவருடைய தந்தை குமார், தாய் பூங்கொடி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் குமார் மட்டும் கைது செய்யப்பட்டார். பிரசாந்த், பூங்கொடி ஆகியோர் சேலம் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர்.

இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய பிரசாந்த்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், குமார், பூங்கொடி ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்தும் நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு கூறினார்.



Next Story