உலக மீனவர் தினத்தையொட்டி கடற்கரை கிராமங்களில் சிறப்பு திருப்பலி


உலக மீனவர் தினத்தையொட்டி கடற்கரை கிராமங்களில் சிறப்பு திருப்பலி
x
தினத்தந்தி 21 Nov 2018 10:30 PM GMT (Updated: 21 Nov 2018 3:09 PM GMT)

குமரி மாவட்டத்தில் உலக மீனவர் தினத்தையொட்டி கடற்கரை கிராமங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. குளச்சலில் முன்னாள் பி‌ஷப் பீட்டர் ரெமிஜியூஸ் கலந்து கொண்டார்.

குளச்சல்,

அகில உலக மீனவர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

குளச்சல் மீன்பிடித்துறைமுக நடவடிக்கை குழு சார்பில் உலக மீனவர் தினம் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நடந்தது. இதற்கு கோட்டார் முன்னாள் பி‌ஷப் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி, சிறப்பு திருப்பலியை நடத்தினார். பின்னர் புனித நீர் ஊற்றி மீன்பிடி கருவிகளையும், கடலையும் அர்ச்சித்தார். இதில் குளச்சல் மறை வட்ட முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி.சேல்ஸ், பங்குத்தந்தை மரிய எட்வின் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில், கடற்கரையில் மணல் எடுப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் கடற்கரையில் மணல் எடுக்க கூடாது, உள்நாட்டு கப்பல் புதிய வழித்தடம் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும், குமரி வர்த்தக துறைமுக திட்டத்தையும் கைவிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மணக்குடியில் புனித அந்திரேயா ஆலயத்தில் பங்குத்தந்தை கில்டஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அதைத்தொடர்ந்து கடற்கரையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த கட்டு மரங்கள், வள்ளங்களுக்கு பங்குத்தந்தை கில்டஸ் புனித நீர் தெளித்தார். மேலும் ஆண்களுக்கு கட்டு மரப்போட்டி, நீச்சல் போட்டி, பெண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் காலை முதல் மாலை வரை நடந்தது.

பள்ளம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் தங்கள் கட்டுமரம், வள்ளம் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு மலர் தூவி பிரார்த்தனை நடத்தினார்கள். அதன்பிறகு கடலில் மலர் தூவியும், ஆரத்தியும் எடுத்தனர்.

இதேபோல் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள பல்வேறு கடற்கரை கிராமங்களில் சிறப்பு திருப்பலிகள், விளையாட்டு போட்டிகள் ஆகியவை நடந்தது. உலக மீனவர் தினத்தையொட்டி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் கட்டுமரங்கள், வள்ளங்கள் கடற்கரையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.

நாகர்கோவில் பறக்கையில் உள்ள ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில் உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பறக்கை அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story