விழுப்புரம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓட்டம்


விழுப்புரம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2018 10:22 PM GMT (Updated: 22 Nov 2018 10:22 PM GMT)

விழுப்புரம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓடினார்.

விழுப்புரம்,

மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் விழுப்புரம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் ஒருவர், திருச்சியில் இருந்து விழுப்புரம் வரை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்.

திருச்சி பொன்மலையை கடந்து ரெயில் வரும்போது ஒரு பெட்டியில் வாலிபர் ஒருவர், பெண்கள் பயன்படுத்தும் தோள் பையுடன் நின்று கொண்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த போலீஸ்காரர், அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து விசாரித்ததில் அதே பெட்டியில் பயணம் செய்த பெண் ஒருவரிடமிருந்து தோள் பையை திருடியிருப்பது தெரிந்தது.

இதையடுத்து அந்த தோள் பையை கைப்பற்றி அதனை அந்த பெண்ணிடம் போலீஸ்காரர் ஒப்படைத்தார். தொடர்ந்து, அந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்ததும் அதிலிருந்து இறங்கி அந்த வாலிபரை அழைத்து வந்து ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அதன் பின்னர் அந்த வாலிபரிடம் விழுப்புரம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பாலமுருகன் (வயது 24) என்பது தெரியவந்தது.

மேலும் பாலமுருகனிடம், இதுபோன்று வேறு எந்தெந்த ரெயில் பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார்? அல்லது வேறு ஏதேனும் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக அமர வைத்திருந்தனர். நேற்று காலை பணியில் இருந்த போலீசாருக்கு ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து பாலமுருகன் நைசாக தப்பி ஓடி விட்டார். இதையடுத்து பல இடங்களில் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story