கல்வராயன்மலை பகுதியில் பலத்த மழை: தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது


கல்வராயன்மலை பகுதியில் பலத்த மழை: தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது
x
தினத்தந்தி 22 Nov 2018 10:37 PM GMT (Updated: 22 Nov 2018 10:37 PM GMT)

கல்வராயன்மலை பகுதியில் பெய்த பலத்த மழையால் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது.

கச்சிராயப்பாளையம்,

விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. 46 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழைநீர் பொட்டியம், கல்படை, மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக வருகிறது.

அணையில் 44 அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். பழைய மற்றும் புதிய பாசன வாய்க்கால் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் பொட்டியம், கல்படை மற்றும் மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு தண்ணீர் வந்தது. இதனால் கடந்த மாதம் இறுதியில் 33 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, 38 அடியை எட்டியது.

இந்த நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகத்தை கடக்கும் போது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை கல்வராயன்மலை பகுதியில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை நள்ளிரவு வரை நீடித்தது. பின்னர் விடிய விடிய சாரல் மழையாக தூறிக்கொண்டே இருந்தது.

இந்த மழையால் கல்படை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கல்படை- பரங்கிநத்தம் இடையே உள்ள தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது. தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் அவ்வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் ஆற்றை கடந்து சென்று வந்தனர். மேலும் பொட்டியம், மல்லிகைப்பாடி ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கோமுகி அணையில் நீர்மட்டம் நேற்று மாலை 40 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Next Story