7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ 4–ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம்


7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ 4–ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 23 Nov 2018 10:30 PM GMT (Updated: 23 Nov 2018 7:30 PM GMT)

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 4–ந்தேதி முதல் ஜாக்டோ–ஜியோ சார்பில் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட அரசு ஊழியர், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ–ஜியோ) கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், நாகேந்திரன், ஜோசப் சேவியர், தவமணி, செல்வம் ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சங்கர், இளங்கோவன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமார், முத்துச்சாமி, ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:– பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர், அமைச்சு பணியாளர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும். அங்கன்வாடி, தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும். 5 ஆயிரம் பள்ளிகள் மூடப்படும் என்ற கொள்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற (டிசம்பர்) 4–ந்தேதி முதல் நடைபெற உள்ள தொடர் வேலை நிறுத்தத்தில் மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்பது.

போராட்டத்தின் முன்னோட்ட நடவடிக்கையாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிவகங்கையில் போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது. மறுநாள் முதல் பிரசார பயணம் மேற்கொள்வது. வருகிற 30–ந்தேதி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story