வெள்ளகோவில் பஸ்நிலையத்தில் தனியார் வாகனங்களின் ஆக்கிரமிப்பு தடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு


வெள்ளகோவில் பஸ்நிலையத்தில் தனியார் வாகனங்களின் ஆக்கிரமிப்பு தடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 25 Nov 2018 10:30 PM GMT (Updated: 25 Nov 2018 6:54 PM GMT)

வெள்ளகோவில் பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்களின் ஆக்கிரமிப்புகளால் நெருக்கடி ஏற்படுவதாகவும்,இவை தடுக்கப்படவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளகோவில்,

வெள்ளகோவில் (வடக்கு ரோடு) முத்தூர் செல்லும் ரோடு போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இந்த ரோட்டில் நடுவே சிமெண்டு பலகை வைத்து ஒரு வழிப்பாதையாக உள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சந்தை இந்த ரோட்டில் அமைந்து உள்ள பஸ் நிலையத்தையொட்டி கூடுகிறது.

எனவே இந்த ரோட்டில் ஞாயிற்றுக்கிழமை மிக அதிக போக்குவரத்து நிறைந்த சாலையாக மாறிவிடும். ஞாயிற்றுக்கிழமை கடைகளை சாலையை ஆக்கிரமித்து போட்டு வியாபாரம் செய்கிறார்கள். இதனால் பஸ் நிலையத்திற்குள் செல்லும் வாகனங்கள் தட்டு தடுமாறிக்கொண்டு செல்கிறது.

மேலும் இந்த ரோட்டில் பல்வேறு கடைகளை போட்டு வியாபாரம் செய்வதால் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலைகள் ஆக்கிரமிப்பால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பஸ்கள் பஸ் நிலையம் வருவதில்லை.

எனவே சாலை ஆக்கிரமிப்பை அகற்ற காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுபோல வெள்ளகோவிலில் தேசிய நெடுஞ்சாலை ரோடுகளை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்துக்கு இடையூறுகளை களையவேண்டும்.

பஸ்நிலையத்தையொட்டி வாரசந்தை மைதானம், இந்த சந்தைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் தங்களது இருசக்கர மற்றும் 4 சக்கர தனியார் சரக்கு வாகனங்களை பஸ் நிலையத்திற்குள் நிறுத்தி விடுகின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் அரசு,தனியார் பஸ்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.

மேலும் பஸ் நிலையத்தின் உள்ளே செல்லும் வழி மற்றும் வெளியே செல்லும் வழி, இவைகளில் ஓரங்களில் பஸ்கள் உள்ளே செல்ல முடியாத அளவிலும், வெளியே வர முடியாத அளவிலும் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். ஆக்கிரமிப்புகடைகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story