மார்த்தாண்டம் அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி மாணவி சாவு


மார்த்தாண்டம் அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி மாணவி சாவு
x
தினத்தந்தி 25 Nov 2018 11:48 PM GMT (Updated: 25 Nov 2018 11:48 PM GMT)

மார்த்தாண்டம் அருகே மின்சாரம் தாக்கி மாணவி பரிதாபமாக இறந்தார்.

குழித்துறை,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- மார்த்தாண்டம் அருகே செம்மங்காலையை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 39). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வசந்தி (35). வீட்டிலேயே தையல்தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு ஜினிமோள் (12) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

ஜினிமோள் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் வசந்தி வெளியே சென்றிருந்தார். ஜினிமோள் அருகில் உள்ள கோவிலுக்கு சமய வகுப்பில் கலந்து கொள்வதற்காக சென்றார். பின்னர், வகுப்பு முடிந்து வீடு திரும்பிய ஜினிமோள் டி.வி. பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது, டி.வி.யில் படம் சரியாக தெரியவில்லை. இதனால் ஜினிமோள் டி.வி.யின் பின்னால் உள்ள வயர்களை சரி செய்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் திடீரென மின்சாரம் தாக்கி ஜினிமோள் தூக்கி வீசப்பட்டு மயங்கினார். அப்போது அங்கு வந்த வசந்தி, ஜினிமோளின் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டக்டர்கள், ஜினிமோள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story