வேலூரில் வக்கீல் மனைவியிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு ‘ஹெல்மெட்’ கொள்ளையர்களுக்கு வலைவீச்சு


வேலூரில் வக்கீல் மனைவியிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு ‘ஹெல்மெட்’ கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 28 Nov 2018 10:15 PM GMT (Updated: 28 Nov 2018 1:27 PM GMT)

வேலூரில் வக்கீல் மனைவியிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற ‘ஹெல்மெட்’ கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர், 

வேலூர் தியாகராஜநகர் பகுதியை சேர்ந்த வக்கீல் ஒருவர் மனைவியுடன் கொணவட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் இரவு காரில் சென்றார்.

பின்னர் இருவரும் அங்கிருந்து காரில் வீட்டிற்கு புறப்பட்டனர். காரை வக்கீல் ஓட்டினார். அவரது மனைவி பின் இருக்கையில் இடது ஓரத்தில் அமர்ந்திருந்தார். அவர்களை ‘ஹெல்மெட்’ அணிந்தபடி 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

இரவு 11 மணியளவில் கார், வீட்டின் முன்பாக வந்து நின்றது. மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் காரை கடந்து சென்று அருகில் உள்ள ஒரு இடத்தில் நின்றனர்

காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த வக்கீலின் மனைவி இறங்குவதற்காக கதவை திறந்தார். காரை ஓட்டி வந்த வக்கீலும் காரை நிறுத்தி விட்டு இறங்குவதற்காக ஆயத்தமானார்.

அப்போது மோட்டார்சைக்கிளில் சற்று தொலைவில் நின்றவர்கள் மீண்டும் காரை நோக்கி திரும்பினர். அப்போது வக்கீலின் மனைவி காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் செல்ல முயன்றார். ஆனால் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரும் அவர் மீது மோதுவதுபோல் நெருங்கினர். அதிர்ச்சியடைந்த வக்கீலின் மனைவி ஒதுங்கி நிற்பதற்குள் அந்த 2 பேரும் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கசங்கிலியை பறித்தனர்.

நகையை பறிகொடுத்த பெண் ‘திருடன்’... ‘திருடன்’... என சத்தம் போட்டார். உடனே டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது கணவரும் இறங்கி ஓடி வந்தார். அருகில் வசிப்பவர்களும் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் நகை பறித்த 2 வாலிபர்களும் அதே மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர். நகைபறித்த கொள்ளையர்கள் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். வக்கீல் மனைவியிடம் தங்க சங்கிலி பறித்து தப்பி சென்ற ‘ஹெல்மெட்’ கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story