வெளிமாவட்டத்தினர் மீன்பிடிப்பதை தடுக்க மீனவர்கள் மனு


வெளிமாவட்டத்தினர் மீன்பிடிப்பதை தடுக்க மீனவர்கள் மனு
x
தினத்தந்தி 28 Nov 2018 11:00 PM GMT (Updated: 28 Nov 2018 9:17 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிமாவட்ட மீனவர்கள் வந்து மீன் பிடிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் திரளாக வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட சி.ஐ.டி.யூ. கடல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சிவாஜி ஆகியோர் தலைமையில் ஏராளமான மீனவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தெற்கு கடலோர பகுதி கிராமங்களில் நாட்டுப்படகு மற்றும் சிறுதொழில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் தொழிலுக்கு சமீபகாலமாக வெளிமாவட்ட மீனவர்களால் இடையூறு ஏற்பட்டு வருகிறது. கீழக்கரை தாலுகாவில் முத்துப்போட்டை ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர், கடலாடி தாலுகா மேலமுந்தல் ஆகிய கிராம பகுதிகளில் இந்த பிரச்சினை அதிகஅளவில் இருந்து வருகிறது. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை உருவானதால் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வெளிமாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டது. ஆனால் இந்த உத்தரவு மீண்டும் மீறப்பட்டு வருவதோடு, கூடுதலாக களிமண்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட தோப்புவலசை கிராமத்தில் வெளிமாவட்ட மீனவர்களை வரவழைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளிமாவட்ட மீனவர்கள் வருகைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று எழுத்துபூர்வமான உத்தரவாதம் அளிக்கப்பட்ட நிலையில் அதனை மீறி அனுமதி அளிக்கப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் விசைப்படகுகள் கடற்கரையில் இருந்து 3 கடல்மைல் தொலைவு பகுதிக்குள் மீன்பிடிக்க தடை உள்ளது. இதனை மீறி விசைப்படகுகள் கரையோரங்களில் மீன்பிடிப்பது அதிகரித்து வருகிறது.

இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் மீனவர்கள் பிரச்சினை அதிகஅளவில் உள்ளதால் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த காலங்களை போல நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.


Next Story