ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 28 Nov 2018 10:30 PM GMT (Updated: 28 Nov 2018 9:25 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மார்கழி மாதத்தில் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா வருகிற 7-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. 8-ந் தேதி தொடங்கும் பகல் பத்து உற்சவத்தில் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

டிசம்பர் 17-ந் தேதி மோகினி அலங்காரம், 18-ந் தேதி பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது. 24-ந் தேதி திருக்கைத்தல சேவை, 25-ந் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி, 27-ந் தேதி தீர்த்தவாரி, 28-ந் தேதி நம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது.

வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பரமபதவாசல் வழியாக, சந்திர புஷ்கரணி, தவிட்ரவாசல் வழியாக மணல்வெளிக்கு செல்லும் பகுதிகளில் தகர கூரைகள் அமைக்கப்பட்டு அலங்காரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளன.

இதேபோல் வெள்ளை கோபுரம் அருகிலும் விழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வைகுண்ட ஏகாதசி விழாவை காண வரும் பக்தர்களின் வசதிக்காக கோவிலில் ஆங்காங்கே எல்.இ.டி. டி.வி.க்கள் பொருத்தப்பட்ட உள்ளன.

Next Story