பிரான்சு நாட்டு வாலிபர்கள் தப்பி ஓட்டம் குமரி கடற்கரையை வீடியோ எடுத்த மர்மம் என்ன? போலீசார் விசாரணை


பிரான்சு நாட்டு வாலிபர்கள் தப்பி ஓட்டம் குமரி கடற்கரையை வீடியோ எடுத்த மர்மம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 28 Nov 2018 10:30 PM GMT (Updated: 28 Nov 2018 9:42 PM GMT)

ஓய்வு பெற்ற கலெக்டரிடம் ஆலோசனை செய்த பிரான்சு நாட்டு வாலிபர்கள் 2 பேர் விமானம் மூலம் தப்பினர். இருவரும் குமரி கடற்கரையை வீடியோ எடுத்த மர்மம் என்ன? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்,

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். அதேபோல பிரான்சு நாட்டை சேர்ந்த 2 வாலிபர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா விசாவில் வந்தனர். அவர்களுக்கு வழிகாட்டியாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 2 வாலிபர்களும் கன்னியாகுமரிக்கு வந்தனர்.

கன்னியாகுமரியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர். பின்னர் அவர்கள் கன்னியாகுமரி கடற்கரையின் இயற்கை அழகை படம் பிடித்தனர். அதைத் தொடர்ந்து கோவளம், கீழ மணக்குடி, மேல மணக்குடி, மணவாளக்குறிச்சி வரை சென்று கடற்கரையின் அழகை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்தனர்.

மேலும் மணவாளக்குறிச்சியில் உள்ள அரியவகை மணல் ஆலைக்கு சென்று அங்கு வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அங்குள்ள அதிகாரிகள் அதற்கு அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. செய்தியாளர்கள் போன்று அவர்கள் செயல்பட்ட விதம் பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

எனவே இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்ய முயன்றபோது உஷாரான அந்த பிரான்ஸ் வாலிபர்கள் 2 பேரும் குளச்சல் பகுதியில் இருந்து வாடகை கார் மூலமாக திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றனர். செல்லும் வழியில் ஆன்லைன் மூலமாக விமான டிக்கெட் பெற்ற அவர்கள் அங்கிருந்து மும்பை செல்லும் விமானத்தில் ஏறிச் சென்றனர். பின்னர் அங்கிருந்து பிரான்சுக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

போலீசார் உஷாராகி விமான நிலையங்களுக்கு தகவல் கொடுத்து, அந்த வாலிபர்களை பிடிக்க முயற்சிப்பதற்குள் இருவரும் பிரான்சுக்கு தப்பி சென்று விட்டனர். உளவுப்பிரிவு, கியூ பிராஞ்ச், தனிப்பிரிவு போலீசாரின் கண்ணில் மண்ணைத்தூவி பிரான்சு வாலிபர்கள் தப்பிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அந்த வாலிபர்கள் 2 பேரும் நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு சென்று ஆலோசனையும் நடத்தியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தற்போது போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

பிரான்சு நாட்டை சேர்ந்த 2 வாலிபர்கள் சுற்றுலா விசா மூலமாக கன்னியாகுமரிக்கு வந்து அறை எடுத்து தங்கியுள்ளனர். அவர்கள் கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் கனிம வளம் சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர். அவர்கள் செய்தியாளர்களை போன்று செயல்பட்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்து, அவர்களை பிடித்து விசாரிக்க முயன்றபோது குளச்சல் பகுதியில் இருந்து கார் மூலம் திருவனந்தபுரம் சென்றனர். அங்கிருந்து மும்பை சென்று பிரான்சுக்கு தப்பி சென்று விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும் அவர்கள் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரின் வீட்டுக்கும், குமரி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கலெக்டர் ஒருவர் வீட்டுக்கும் சென்று அவர்களை சந்தித்து பேசியதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அது உண்மை தானா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பிரான்சு நாட்டு வாலிபர்கள் எதற்காக குமரி மாவட்டம் வந்தார்கள்? வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததின் மர்மம் என்ன? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.

Next Story