மோட்டார் சைக்கிளை விடுவிக்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது


மோட்டார் சைக்கிளை விடுவிக்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
x
தினத்தந்தி 30 Nov 2018 10:00 PM GMT (Updated: 30 Nov 2018 7:23 PM GMT)

மோட்டார் சைக்கிளை விடுவிக்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம் பகுதியில் சாலையோரம் கால்வாய் அமைக்கும் பணியை தனியார் நிறுவனம் எடுத்து நடத்தி வருகிறது. இந்த பணிகளை அந்த நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வரும் தங்கதுரை என்பவர் கண்காணித்து வந்தார்.

நேற்று முன்தினம் வளசரவாக்கம் பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து வளசரவாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், அங்கு சென்றார். அப்போது தங்கதுரைக்கும், இன்ஸ்பெக்டர் அய்யப்பனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், அங்கு நின்று கொண்டிருந்த தங்கதுரையின் மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச்சென்று விட்டார். அந்த மோட்டார்சைக்கிளை விடுவிக்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டதாக கூறப் படுகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத தங்கதுரை, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை தங்கதுரையிடம் கொடுத்து, அதை இன்ஸ்பெக்டரிடம் லஞ்சமாக கொடுக் கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

அதன்படி நேற்று தங்கதுரை ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பனிடம் லஞ்சமாக கொடுத்தார். அந்த பணத்தை அவர் வாங்கவும், அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ஜெயபாரதி தலைமையிலான போலீசார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பனை கையும், களவுமாக பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மோட்டார்சைக்கிளை விடுவிக்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் போக்கு வரத்து இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story