சட்டசபை துணை சபாநாயகராக விஜய் அவ்டி தேர்வு சிவசேனாவை சேர்ந்தவர்


சட்டசபை துணை சபாநாயகராக விஜய் அவ்டி தேர்வு சிவசேனாவை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 30 Nov 2018 10:24 PM GMT (Updated: 30 Nov 2018 10:24 PM GMT)

சிவசேனாவை சேர்ந்த விஜய் அவ்டி சட்டசபை துணை சபாநாயகராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மும்பை,

தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை சட்டசபை துணை சபாநாயகர் பதவி காலியாக இருந்தது. இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.

இந்த நிலையில் காலியாக இருந்த அந்த பதவிக்கு நேற்று தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதில் சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. விஜய் அவ்டி, காங்கிரஸ் சார்பில் ஹர்சவர்தன் சக்பால் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ. பட்சு கடு ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

கடைசி நேரத்தில் ஹர்சவர்தன் சக்பால் மற்றும் பட்சு கடு இருவரும் தங்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். இதையடுத்து சிவசேனா எம்.எல்.ஏ. விஜய் அவ்டி துணை சபாநாயகராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தகவலை சபாநாயகர் ஹரிபாவு பாக்டே அறிவித்தார்.

மராட்டியத்தில் இது 13-வது சட்டசபையாகும். இதுவரை 22 துணை சபாநாயகர்கள் பதவி வகித்துள் ளனர். விஜய் அவ்டி 23-வது துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இவர் அகமத் நகர் மாவட்டத்தின் பர்நேர் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் கூறியதாவது:-

பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் இடையே கூட்டணியை மேம்படுத்தும் வகையில் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

துணை சபாநாயகர் பதவி பாரம்பரியமாக எதிர்க்கட்சியினருக்கு வழங்கப்படுவதே வழக்கம். ஆனால் அந்த பாரம்பரியம் எங்களது காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் அரசால் பின்பற்றப்படவில்லை. பட்னாவிஸ் அரசும் அதை பின்பற்றவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story