கஜா புயலால் சேதம் அடைந்த பகுதிகளை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் கமல்ஹாசன் பேட்டி


கஜா புயலால் சேதம் அடைந்த பகுதிகளை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் கமல்ஹாசன் பேட்டி
x
தினத்தந்தி 1 Dec 2018 11:15 PM GMT (Updated: 1 Dec 2018 6:53 PM GMT)

கஜா புயலால் சேதம் அடைந்த பகுதிகளை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

சேதுபாவாசத்திரம்,

கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தின் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் பகுதியில் ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்தன. மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்து விழுந்து ஏராளமான கிராமங்களில் கடந்த 16 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மீனவ கிராமங்களில் 246 விசைப்படகுகளும், 750-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் சேதம் அடைந்துள்ளது. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூரை மற்றும் ஓட்டு வீடுகள் புயலின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சேதம் அடைந்தது.

சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதியில் தேங்காய் நார்களை மூலாதாரமாக கொண்டு செயல்பட்டு வந்த கயிறு தொழிற்சாலைகள் கீழே சாய்ந்து உள்ளன. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை புரட்டி போட்ட கஜா புயல் குறிப்பாக தென்னை விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி உள்ளது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினம், பள்ளத்தூர், செருபாலக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை நேற்று பார்வையிட்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து அதிராம்பட்டினத்துக்கு சென்ற கமல் ஹாசன், அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை வடகாடு, ஏரிப்புறக்கரை, கரையூர்தோப்பு மற்றும் பிள்ளையார் கோவில் பகுதிகளை பார்வையிட்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் மகிழங்கோட்டைக்கு வந்த கமல்ஹாசன் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

புயல் பாதிப்பால் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி மக்கள் பெரிய இழப்பை சந்தித்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க ஒரு அமைச்சரிடம் வலியுறுத்தினேன். அதற்கு அவர், இந்த பகுதிகளில் அதிக பாதிப்பு இல்லை என கூறி விட்டார். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகுதான் இப்பகுதியில் உள்ள சேதத்தின் அளவு தெரிகிறது. எனவே கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அவர் அந்த பகுதியில் உள்ள பெண்களிடம் உங்களது வங்கி கணக்கில் நிவாரண தொகை அரசு சார்பில் செலுத்தப்பட்டுள்ளதா? என கேட்டார். அதற்கு அந்த பெண்கள், தங்களுக்கு எந்த நிவாரண தொகையும் இதுவரை வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை என தெரிவித்தனர். 

Next Story