புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சாமிவேடம் அணிந்து நிவாரண நிதி திரட்டிய நாடக கலைஞர்கள்


புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சாமிவேடம் அணிந்து நிவாரண நிதி திரட்டிய நாடக கலைஞர்கள்
x
தினத்தந்தி 1 Dec 2018 11:00 PM GMT (Updated: 1 Dec 2018 8:29 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட, திருச்சியில் நாடக கலைஞர்கள் சாமி வேடம் அணிந்து நிவாரண நிதியை திரட்டினர்.

திருச்சி,

‘கஜா’ புயல் தமிழகத்தில் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடியது. இந்த புயலால் லட்சக்கணக்கான தென்னை உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. லட்சக்கணக்கான மின் கம்பங்கள், மின்மாற்றிகள், துணை மின்நிலையங்களும் பாதிப்புக்குள்ளாயின. புயலுக்கு பிறகு மின்சாரம் இன்றி பல கிராமங்களில் மக்கள் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட, நலிந்த நிலையில் உள்ள நாடக கலைஞர்களும், நடனக்குழுவினரும் முன்வந்தனர். தங்களிடம் நிதி இல்லாவிட்டால் என்ன?, வீதிகளில் கலைநிகழ்ச்சி நடத்தி, நிதி திரட்டி அதை நிவாரணமாக கொடுத்து உதவலாமே என்ற எண்ணத்தில் திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்கம், அவ்வை சண்முகி தெய்வீக நடனக்கலைக்குழு இணைந்து திருச்சி மாநகரில் நேற்று பல்வேறு இடங்களில் நிகழ்ச்சி நடத்தி ‘கஜா’ புயல் நிவாரண நிதியினை வசூல் செய்தனர்.

திருச்சி மேலசிந்தாமணி அண்ணாசிலை அருகில் நாடக நடிகர்கள் சிலர் சாமிவேடம் அணிந்து மேளதாள இசைக்கு ஏற்ப நடனம் ஆடினர். அப்போது கைகளில் உண்டியல் ஏந்தியவாறு புயல் நிவாரண நிதியினை சேகரித்தனர். மேலும் திரைப்பட பாடல்களுக்கு ஏற்ப நடனக் குழுவினர் வீதிகளில் நடனமாடினர். இதில் நாடக நடிகர்கள் சங்க பொதுச்செயலாளர் முகமது மஸ்தான் மற்றும் நிர்வாகிகள் காத்தான், கண்ணன், சந்திரசேகர், கணேசன், நடனக்குழு நிறுவனர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வீதிகளில் சாமி வேடமிட்டும், ஆடல்-பாடல் நடத்தியும் புயல் நிவாரண நிதி சேகரித்தவர்களை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினர். தொடர்ந்து சத்திரம் பஸ் நிலையம், ராமகிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகில், திருச்சி உழவர் சந்தை, உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில், பாண்டமங்கலம் அரசமரம், உறையூர் குறத்தெரு, சுப்பிரமணியபுரம் மார்க்கெட், ஜங்ஷன் காதிகிராப்ட் உள்ளிட்ட இடங்களிலும் கலை நிகழ்ச்சி நடத்தி புயல் நிவாரண நிதியினை சேகரித்தனர். தொடர்ந்து நிதி திரட்டி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று வழங்க திட்டமிட்டுள்ளனர். 

Next Story