ஒருமித்த கருத்துடைய கட்சியுடன் தேர்தலில் கூட்டணி அரியலூர் கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேச்சு


ஒருமித்த கருத்துடைய கட்சியுடன் தேர்தலில் கூட்டணி அரியலூர் கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேச்சு
x
தினத்தந்தி 1 Dec 2018 11:00 PM GMT (Updated: 1 Dec 2018 8:43 PM GMT)

ஒருமித்த கருத்துடைய கட்சியுடன் தேர்தலில் கூட்டணி அமைப்போம் என்று அரியலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

அரியலூர்,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 5-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அரியலூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர்கள் கோவை தங்கம், விடியல் சேகர், இளைஞர் அணி தலைவர் யுவராஜா உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதையடுத்து ஜி.கே.வாசன் பேசியதாவது:-

த.மா.கா. தேர்தலுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி அல்ல. லட்சியத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி. தேர்தலில் வெற்றி, தோல்வி ஏற்பட்டாலும் உயிரோட்டமாக செயல்பட்டு வருகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர் இன்னும் துடைக்கப்படவில்லை. மத்திய அரசு உடனடியாக நிவாரண தொகையை வழங்க வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.மா.கா. சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணமும், ரூ.40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டு உள்ளன. தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டு உள்ளது. அந்த தொகை போதாது. தற்போது ஆள்பலம், பணபலம், அதிகாரபலம் உள்ளவர்கள் மட்டுமே கட்சி நடத்த முடியும். ஆனால் த.மா.கா. தொண்டர்கள், மக்கள் பலத்தால் செயல்பட்டு வருகிறது. தேர்தலின் போது ஒருமித்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைப்போம். மக்கள் மத்திய, மாநில அரசுகள் மீது வெறுப்பில் உள்ளனர். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து வருகிற 8-ந் தேதி கிருஷ்ணகிரியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து ஜி.கே.மூப்பனார் பற்றிய செய்திகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். பின்னர் ஜி.கே.வாசனுக்கு அரியலூர் மாவட்ட த.மா.கா. சார்பில் வீரவாள் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

பொதுக்கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினரும், ஆண்டிமடம் முன்னாள் சேர்மனுமான விஸ்வநாதன், மாநில மகளிர் அணி துணை செயலாளர் தா.பழூர் கல்யாணி சுப்பிரமணியன், அரியலூர் மாவட்ட துணைத் தலைவர் பழனிசாமி, அரியலூர் மாவட்ட விவசாய அணி தலைவர் வேதநாயகம், பூவணிபட்டு கணேசன், அரியலூர் மாவட்ட பொருளாளர் ஏ.கே.எம். சுப்ரமணியன், மாநில நிர்வாகி ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் காமராஜ், அரியலூர் மாவட்ட பொதுச் செயலாளர்கள் செல்வராஜ், விஜயகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ், துணைத் தலைவர் கெங்காதுரை, மாவட்ட பிரதிநிதி கரிகாலன், செயலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் குணசேகரன் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அரியலூர் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.எம்.குமார் வரவேற்றார். முடிவில் அரியலூர் நகர தலைவர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். பொதுக்கூட்டத்தை முன்னிட்டு அரியலூர் நகரை சுற்றிலும் ஜி.கே.வாசனை வரவேற்று விளம்பர பதாகைகள் கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டிருந்தது.

Next Story