2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி அமைத்து வெற்றிபெறும் எதிர்க்கட்சிகளுக்கு முதல்-மந்திரி பட்னாவிஸ் பதில்


2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி அமைத்து வெற்றிபெறும் எதிர்க்கட்சிகளுக்கு முதல்-மந்திரி பட்னாவிஸ் பதில்
x
தினத்தந்தி 1 Dec 2018 11:15 PM GMT (Updated: 1 Dec 2018 9:46 PM GMT)

2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து வெற்றிபெறும் என சட்டசபையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்தார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினத்துடன் முடிந்தது. இந்த கூட்டத் தொடரின் போது பல்வேறு பிரச்சினைகளில் அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. பா.ஜனதா, சிவசனோ கூட்டணிகள் இடையேயான சீண்டல்கள் குறித்தும் கிண்டல் அடித்தனர்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு சட்டசபை கூட்டத் தொடரின் நிறைவு நாளில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி ெகாடுத்தார்.

அப்போது, 2019-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றம் மற்றும் மராட்டிய சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதாவும், சிவசேனாவும் கூட்டணி வைக்கும் என்று கூறினார். சிவசேனாவின் வில்- அம்பும், பா.ஜனதாவின் தாமரையும் இணைந்து 2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெறும் என்று குறிப்பிட்டார்.

வலதுசாரி அமைப்பான கோவாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் “சனாதனா சன்ஸ்தான்” அமைப்பு பயங்கரவாதத்தை பரப்புவதாகவும், இதை தடை செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலுக்கு பதில் அளித்த முதல்-மந்திரி பட்னாவிஸ், “ எந்த ஒரு அமைப்பையும் தடைசெய்யும் உரிமை மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உள்பட்டது. இந்த அதிகாரம் மத்திய உள்துறையிடம் தான் உள்ளது” என்றார்.

மேலும் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் விமர்சிக்கப்படுவது குறித்து பதில் அளித்த அவர், அதே கட்சியை சேர்ந்த மந்திரிகள் சுபாஸ் தேசாய் மற்றும் ஏக்நாத் சிண்டே ஆகியோர் அரசின் திட்டங்களை தொடர்ந்து பாராட்டி வருவதை சுட்டிக்காட்டினார்.

மேலும் மும்பை- நாக்பூர் விரைவு நெடுஞ்சாலை திட்டம், மாநிலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும் என்று கூறிய அவர், இதன்மூலம் மாநிலம் வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைக்கும் என்று கூறினார்.

நவிமும்பை சர்வதேச விமான நிலைய பணிகள் குறித்து பேசியபோது, நிர்ணயம் செய்யப்பட்ட காலவரம்பான 2019-ம் ஆண்டு டிசம்பருக்குள் பணிகளை முடிப்பது கடினம் என கூறினார்.

மேலும் ஒரு முனையம் மற்றும் ஓடுபாதை அமைக்கும் பணி நிலுவையில் உள்ளதால் 2020-ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் பணிகள் முடிய வாய்ப்புள்ளது என்றார்.

இதேபோல் மும்பை நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தியது மற்றும் மெட்ரோ ரெயில் திட்டங்கள் அரசின் மிகப்பெரிய சாதனைகள் என தேவேந்திர பட்னாவிஸ் பெருமிதத்துடன் கூறினார்.

Next Story