உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் மாற்றுத்திறனாளிகள் சங்க விழாவில் தீர்மானம்


உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் மாற்றுத்திறனாளிகள் சங்க விழாவில் தீர்மானம்
x
தினத்தந்தி 1 Dec 2018 10:33 PM GMT (Updated: 1 Dec 2018 10:33 PM GMT)

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்க விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர்,

அனைத்து மாற்றுத்திறனாளிகள் நல சங்கம், மக்கள் வழிகாட்டி இயக்கம் ஆகியவை சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் சங்கவிழா நேற்று திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அனைத்து மாற்றுத்திறனாளிகள் நலசங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

செயலாளர் சுரேஷ்பாபு, துணைச்செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் கலந்துகொண்டு பேசினார். மேலும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். மக்கள் வழிகாட்டி இயக்க மாநில தலைவர் ராஜேஷ் உள்பட பலர் பேசினர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகள் மற்றும் புகார்களை பதிவு செய்ய தனியாக வாட்ஸ்-அப் நம்பர் பதிவு செய்து வெளியிட வேண்டும். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3-ல் இருந்து 5 சதவீதம் வரை ஒதுக்கீடு செய்ய கட்டாயம் அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

வீடு இல்லாத 1500 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு-2 மாணவர்கள் செய்திருந்தனர்.

Next Story