வங்கி அதிகாரி வீட்டில் 6 பவுன்-வெள்ளி பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


வங்கி அதிகாரி வீட்டில் 6 பவுன்-வெள்ளி பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Dec 2018 10:15 PM GMT (Updated: 2 Dec 2018 8:36 PM GMT)

கரூரில் வங்கி அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர்,

கரூர் கவுரிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்மூர்த்தி (வயது 54). இவர், கரூரில் உள்ள ஒரு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் வெளியூர் சென்றுவிட்டு சம்பவத்தன்று வீடு திரும்பிய போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டினுள் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோவை பார்த்த போது அதிலிருந்த 6½ பவுன் நகை மற்றும் ½ கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் மூர்த்தி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெறுவதால், வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர்.

வெளியூர் சென்றாலும் வீட்டில் ஒருவரை வைத்து விட்டு தான் போக வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. எனவே கரூரில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து, திருட்டு போன நகை, பணம், பொருட்களை மீட்டுதர மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story