பிளஸ்-1 மாணவியை கடத்தி பலாத்காரம்: இசைக்கலைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு


பிளஸ்-1 மாணவியை கடத்தி பலாத்காரம்: இசைக்கலைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 3 Dec 2018 11:15 PM GMT (Updated: 3 Dec 2018 6:44 PM GMT)

திருச்செங்கோடு அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் இசைக்கலைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த சுள்ளிப்பாளையம் அருகே உள்ள சிறுபூலாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் வீரமணி (வயது 22). இசைக்கலைஞராக (டிரம்ஸ் வாத்தியம் வாசிப்பாளர்) வேலைப்பார்த்து வருகிறார்.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 20-ந் தேதி திருச்செங்கோடு அருகே கட்டிட மேஸ்திரியின் மகளான பிளஸ்-1 மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றார். பின்னர் குழந்தை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை திருச்செங்கோடு புறநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சுசிலா ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதற்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், குழந்தை திருமணம் செய்ததற்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், பலாத்காரம் செய்ததற்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதை ஏக காலத்தில் 10 ஆண்டு சிறை தண்டனையாகவும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளங்கோ தீர்ப்பு கூறினார்.

Next Story