அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலில் சோமவாரவிழா திரளான பக்தர்கள் வழிபாடு


அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலில் சோமவாரவிழா திரளான பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 3 Dec 2018 10:30 PM GMT (Updated: 3 Dec 2018 9:11 PM GMT)

அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலில் சோமவாரவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் ரெத்தினகிரீசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கார்த்திகை சோமவாரம் விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு முதல் சோமவார விழா கடந்த நவம்பர் மாதம் 19-ந்தேதி தொடங்கியது.

இந்தநிலையில் 3-வது சோமவாரவிழாவான நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குளித்தலை பகுதியைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து சுவாமிக்கு சிறப்பு அர்சனைகள் செய்து வழிபட்டனர். இதில் பக்தர்கள் அடிவாரத்தில் தங்களின் விரதத்தை முடிப்பதற்காக இக்கோவில் பாறைகளில் தாங்கள் கொண்டு வந்த பூ, வாழைப்பழங்கள், மாவிளக்கு உள்பட பல பொருட்களை வைத்து தேங்காய் உடைத்து சுவாமியை வழிபட்டனர்.

இதில் சில பக்தர்கள் தங்களது விளைநிலங்களில் பயிரிட்டு அறுவடை செய்த நெல், கடலை, மிளகாய். கம்பு, உள்பட பல பொருட்களை கொண்டுவந்து கோவில் படிக்கட்டுகள் மற்றும் மலையைச் சுற்றிலும் கொட்டி வழிபட்டனர். மேலும் நேற்று பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்த காரணத்தால் குளித்தலை போலீசார் மற்றும் ஊர்காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Next Story