தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக மழை விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாததால் விவசாயிகள் வேதனை


தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக மழை விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாததால் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 4 Dec 2018 10:45 PM GMT (Updated: 4 Dec 2018 7:33 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. இதனால் விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

தஞ்சாவூர்,

கடந்த மாதம் 16-ந்தேதி கரையை கடந்த கஜா புயலுக்குப்பின்னர் தமிழகத்தில் ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் காஜா புயலுக்குப்பின்னர் விட்டு, விட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பலத்த மழைகொட்டியது. இதனால் மீட்பு பணிகளும் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை மழை பெய்தது. பின்னர் இரவில் விட்டு விட்டு மழை பெய்தது.

நேற்று 2-வது நாளாக மழை கொட்டியது. அதிகாலை முதல் பெய்யத்தொடங்கிய மழை 7 மணி வரை நீடித்தது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. பின்னர் அவ்வப்போது லேசான தூறல் காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 3 மணி அளவில் மீண்டும் மழை பெய்யத்தொடங்கியது. அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அணைக்கரை பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.

இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது முன்கூட்டிய சம்பா நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. ஒரத்தநாடு, வாண்டையார் இருப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் நெற்பயிர்கள் விளைந்து காணப்படுகின்றன.

தற்போது மழை பெய்து வருவதால் இதனை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை பெய்து வயல்கள் ஈரமாக உள்ளதால் அறுவடை எந்திரம் மூலம் உடனடியாக அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை நின்று வெயில் அடித்து தரை காய்ந்த பின்னர் தான் அறுவடை செய்யும் நிலை உள்ளது.

ஏற்கனவே கஜா புயலால் சாய்ந்த நெற்பயிர்களும் இன்னும் பல இடங்களில் அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

அதிராம்பட்டினம் 24, கும்பகோணம் 10, பாபநாசம் 6, தஞ்சை 6, திருவையாறு 2, திருக்காட்டுப்பள்ளி 2, வல்லம் 5, அய்யம்பேடை 7, திருவிடைமருதுர் 10, மஞ்சளாறு 9, நெய்வாசல் தென்பாதி 8, பூதலூர்1, வெட்டிக்காடு 7, ஈச்சன்விடுதி 7, ஒரத்தநாடு 4, மதுக்கூர் 13, பட்டுக்கோட்டை 21, பேராவூரணி 16, அணைக் கரை 31, குருங்குளம் 2.

Next Story