காடுவெட்டி குரு குடும்ப பிரச்சினையில் தீர்வு


காடுவெட்டி குரு குடும்ப பிரச்சினையில் தீர்வு
x
தினத்தந்தி 4 Dec 2018 10:30 PM GMT (Updated: 4 Dec 2018 8:26 PM GMT)

வன்னியர் சங்கத்தின் மாநில தலைவராக இருந்த காடுவெட்டி ஜெ.குரு அண்மையில் உயிரிழந்தார்.

உடையார்பாளையம்,

வன்னியர் சங்கத்தின் மாநில தலைவராக இருந்த காடுவெட்டி ஜெ.குரு அண்மையில் உயிரிழந்தார். இந்நிலையில் குருவின் மகள் விருத்தாம்பிகைக்கும், குருவின் தங்கை சாவித்திரி மகன் மனோஜ்கிரணுக்கும் கடந்த நவம்பர் மாதம் 28-ந் தேதி கும்பகோணத்தில் திருமணம் நடைபெற்றது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. இந்நிலையில் குருவின் குடும்பத்தினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து குருவின் மனைவி சொர்ணலதா, மகன் கனலரசன், மகள் விருத்தாம்பிகை, குருவின் தங்கை குடும்பத்தினர், குருவின் தாயார் மற்றும் பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் வைத்தியலிங்கம், கட்சியினர் இடையே உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை தனித்தனியாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தனிப்பட்ட நபர்களை சம்மந்தமில்லாமல் சமூக வலைத்தளங்கள் மூலம் பேசுவது, பதிவிடுவதை குருவின் குடும்பத்தினர் தவிர்க்க வேண்டும். குருவின் சமாதிக்கு வணங்க செல்ல விரும்பும் குருவின் மகன், மகள், உறவினர்கள் செல்வதை ஊரார்கள் தடுக்க கூடாது. சட்டம், ஒழுங்கு பாதிக்க கூடிய வகையில் யாரும் செயல்பட கூடாது. குரு மனைவி வழி உறவினர்கள், அவரது தாய் வீட்டுக்கு வந்து செல்வதை யாரும் தடுக்கக்கூடாது. மீறும் பட்சத்தில் குற்றவியல் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதாக இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். பின்னர் சமாதான பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு இருதரப்பினரும் கையெழுத்திட்டு சென்றனர். 

Next Story