ஜாக்டோ-ஜியோ கூட்டம் 10-ந்தேதி மதுரையில் நடக்கிறது ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை என அறிவிப்பு


ஜாக்டோ-ஜியோ கூட்டம் 10-ந்தேதி மதுரையில் நடக்கிறது ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை என அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2018 10:15 PM GMT (Updated: 4 Dec 2018 9:24 PM GMT)

ஜாக்டோ-ஜியோ கூட்டம் 10-ந்தேதி மதுரையில் நடக்கிறது. ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகிகள் அறிவித்தனர்.

திருச்சி,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் மாதம் 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்தது. இந்த நிலையில் அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் லோகநாதன் என்பவர் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசு ஊழியர் களின் போராட்டத்தை வருகிற 10-ந்தேதி வரை தள்ளிவைக்க கேட்டிருந்தனர். மேலும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி வருகிற 10-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய அரசின் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை 10-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். இதையடுத்து ஜாக்டோ-ஜியோ போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்

இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் கூட்டம் திருச்சியில் ஜங்ஷன் அருகே ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், உயர் மட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மதுரை ஐகோர்ட்டில் நடந்த விவாதங்களையும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டன. கூட்டம் முடிந்ததும் மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

7 அம்ச கோரிக்கைகள் எங்களின் வாழ்வாதார பிரச்சினை. 21 மாத நிலுவை தொகையை ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட மேல் அதிகாரிகள் பெற்றுள்ளனர். மதுரை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணையின் போது நீதிபதிகளிடம் எங்களது கோரிக்கைகளை தெரிவித்துள்ளோம். 10-ந்தேதி வரை நீதிபதிகள் காலஅவகாசம் கேட்டுள்ளனர். நீதியின் மேல் நம்பிக்கை வைத்திருப்பதால் நாங்கள் போராட்டத்தை தள்ளிவைத்தோம்.

தீர்மானங்கள்

வருகிற 10-ந்தேதி மதுரையில் ஜாக்டோ-ஜியோ கூட்டம் நடைபெறும். நீதிபதிகள் கருத்துக்கு பின் ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்போம். 7 அம்ச கோரிக்கைகள் மீதான நிலைப்பாட்டை 10-ந்தேதி தமிழக அரசு அறிக்கையாக வழங்கும் என நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், செல்வராஜ், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் ரெங்கராஜன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகிற 10-ந்தேதி மதுரையில் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடத்துவது, வழக்கு தொடர்பாக ஒருங்கிணைப்பாளர்கள் 20 பேர் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story