கருணாநிதிக்கு இரங்கல் கவிதை வாசித்ததால் சர்ச்சை: விருப்ப ஓய்வுபெற்ற பெண் போலீஸ் ஏட்டு செல்வராணி பேட்டி


கருணாநிதிக்கு இரங்கல் கவிதை வாசித்ததால் சர்ச்சை: விருப்ப ஓய்வுபெற்ற பெண் போலீஸ் ஏட்டு செல்வராணி பேட்டி
x
தினத்தந்தி 5 Dec 2018 11:00 PM GMT (Updated: 5 Dec 2018 7:42 PM GMT)

கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்ததால் சர்ச்சைக்குள்ளான பெண் போலீஸ் ஏட்டு செல்வராணி, பேச்சுரிமை இல்லாததால் விலகினேன் என்று கூறினார்.

திருச்சி,

திருச்சி கே.கே.நகர் ரெங்காநகரை சேர்ந்தவர் செல்வராணி (வயது 43). இவர் திருச்சி மாநகர காவல்துறையில் நுண்ணறிவு பிரிவில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர் கவிதைகள் வாசிப்பது, கட்டுரைகள் எழுதுவது போன்றவற்றில் சிறந்து விளங்கியதால் காவல்துறை சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்தபோது, செல்வராணி இரங்கல் கவிதை வாசித்து அதனை முகநூலில் பதிவிட்டார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதனை தொடர்ந்து செல்வராணிக்கு ‘மெமோ’ கொடுக்கப்பட்டது. அது பற்றி அவர் விளக்கம் அளிப்பதற்கு முன்பாகவே திருச்சி மாநகர காவல்துறையில் இருந்து மத்திய மண்டலத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதை ஏற்க மறுத்த செல்வராணி, 3 மாதகாலம் மருத்துவ விடுப்பில் சென்றார். அதன்பிறகு தான் விருப்ப ஓய்வில் செல்ல விரும்புவதாக காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் கடிதம் அளித்தார். இதையடுத்து செல்வராணியின் விருப்ப ஓய்வு ஏற்கப்பட்டு கடந்த 30-ந் தேதி அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கண்டித்து திருச்சியில் நேற்று முன்தினம் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில் பங்கேற்க வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், செல்வராணியின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னை சந்தித்தது பற்றி செல்வராணி கூறுகையில், “சிறு வயது முதலே தமிழ் மீது பற்று அதிகம். பல்வேறு கவிதை போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளேன். தமிழ் மொழி மீதும் எனக்குள்ள அன்பை யாராலும் பிரிக்க முடியாது. தமிழ் உணர்வின் அடிப்படையில் தான் கருணாநிதிக்கு இரங்கல் கவிதை வாசித்தேன். இதில் அரசியல் இல்லை. ஆனால் அதையும் அரசியலாக்கி என் மீது நடவடிக்கை எடுத்தனர்.

பேச்சுரிமை இல்லாத இடத்தில் வேலை பார்க்க விருப்பம் இல்லை. அதனால் தான் விருப்ப ஓய்வு பெற்றேன். தற்போது ‘கூட்டி பெருக்காத குப்பை நான்’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதி வருகிறேன். காவல்துறையில் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுப்பேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை சந்தித்து ஆறுதல் கூறியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்று கூறினார்.

Next Story