செல்போனில் ஏ.டி.எம்.கார்டு நம்பர் கேட்டு பெண் கிராம நிர்வாக அதிகாரி வங்கி கணக்கில் ரூ.45 ஆயிரம் மோசடி


செல்போனில் ஏ.டி.எம்.கார்டு நம்பர் கேட்டு பெண் கிராம நிர்வாக அதிகாரி வங்கி கணக்கில் ரூ.45 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 5 Dec 2018 10:30 PM GMT (Updated: 5 Dec 2018 8:31 PM GMT)

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி செல்போனில் ஏ.டி.எம்.கார்டின் நம்பர் கேட்டு பெண் கிராம நிர்வாக அதிகாரி வங்கி கணக்கில் இருந்து ரூ.45 ஆயிரம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்,

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி மர்மநபர்கள் செல்போன் மூலம் பலரிடம் ஏ.டி.எம். கார்டில் உள்ள 9 இலக்க எண் மற்றும் ரகசிய குறியீடு எண்ணை பெற்று, அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடி வருகின்றனர். இந்த மோசடியில் பணத்தை இழந்தவர்கள் பலர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இது போன்ற மோசடியில் செயல்படும் கும்பலை போலீசார் வலைவீசி தேடினாலும் சிக்கியதில்லை. வங்கியில் இருந்து பேசுவதாக கூறி செல்போன் எண்ணிற்கு எந்த அழைப்பு வந்தாலும் ஏ.டி.எம். கார்டு நம்பர் மற்றும் ரகசிய குறியீடு எண்ணை யாரும் கொடுக்க வேண்டாம் என போலீசாரும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் வங்கிகள் தரப்பில் இருந்தும் நாங்கள் யாரும் செல்போனில் ஏ.டி.எம். கார்டு விவரங்களை கேட்பதில்லை என குறுந்தகவல் அனுப்புவதும் உண்டு. ஆனாலும் ஒரு சிலர் இந்த மோசடியில் பணத்தை இழந்து வருகிற சம்பவம் அவ்வப்போது நடந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் கரூரில் பெண் கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் பணத்தை இழந்து உள்ளார்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

கரூர் பகுதியை சேர்ந்தவர் வசந்தி. இவர் குப்பம் ஊராட்சியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு நேற்று முன்தினம் காலை ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பின் மறுமுனையில் ஒரு ஆண் பேசினார். அவர் இந்தியிலும், பின்னர் ஆங்கிலத்திலும் பேசினார். அப்போது, ‘நான் அரசுடமையாக்கப்பட்ட ஒரு வங்கி கிளை அதிகாரி பேசுகிறேன். உங்களது வங்கி ஏ.டி.எம். கார்டு செயல் இழந்து விட்டது. அதனால் புதுப்பிக்க வேண்டும். உங்களது வங்கி ஏ.டி.எம். கார்டின் 9 இலக்க எண் மற்றும் ரகசிய குறியீடு எண்ணை தாருங்கள். உங்களது செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வரும்“ என கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய வசந்தி, தனது வங்கி ஏ.டி.எம். எண் மற்றும் ரகசிய குறியீடு எண்ணை அந்த நபரிடம் கூறினார். இதை யடுத்து சிறிது நேரத்தில் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் அழைப்பு துண்டித்த சிறிது நேரத்தில், வசந்தியின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. வங்கி ஏ.டி.எம். கார்டு புதுப்பிக்கப்பட்ட தகவல் தான் வந்திருக்கும் என எண்ணி அதனை பார்த்தார். அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.45 ஆயிரம் எடுக்கப்பட்டதாக ஒரு குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்த வசந்தி அதிர்ந்து போனார். செல்போனில் பேசிய மர்மநபர் தான், ஏ.டி.எம். கார்டு ரகசிய குறியீடு எண்ணை பெற்று பணத்தை எடுத்தது தெரியவந்தது.

இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். வங்கி அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இதுகுறித்து உடனடியாக கரூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏ.டி.எம். கார்டு எண்ணை பெற்று ரூ.45 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர். இது போன்ற மோசடியில் பெண் கிராம நிர்வாக அதிகாரியின் பணம் பறிபோனது அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி செல்போனில் எந்த அழைப்பு வந்தாலும் அவர்களிடம் ஏ.டி.எம். கார்டு மற்றும் வங்கி கணக்கு எண் விவரங்களை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை பார்த்த சிலர் உஷாராகவும் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கியில் இருந்து பேசுவதாக யாரேனும் செல்போனில் பேசினால், அப்படியா? எந்த வங்கி, எங்கிருந்து பேசுகிறீர்கள், உங்களது பெயர் என்ன? என துருவி, துருவி கேட்பது உண்டு. அதிலே மர்மநபர்கள் பயந்து இணைப்பை துண்டித்துவிடுவதும் நடந்து வருகிறது. ஒரு சிலர் வங்கி ஏ.டி.எம். கார்டு எண்ணை தெரிவிக்காமல் கண்டபடி திட்டிவிடுவதும் வழக்கம். சிலர் சம்பந்தமில்லாத எண்களை தெரிவித்து மர்மநபர்களை தெறிக்கவிடும் சம்பவமும் நடந்து வருவது குறிப் பிடத்தக்கது. 

Next Story