மண்ணச்சநல்லூர் அருகே அரசு பஸ் வாய்க்காலில் கவிழ்ந்து டிரைவர் உள்பட 8 பேர் படுகாயம்


மண்ணச்சநல்லூர் அருகே அரசு பஸ் வாய்க்காலில் கவிழ்ந்து டிரைவர் உள்பட 8 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Dec 2018 11:00 PM GMT (Updated: 5 Dec 2018 8:53 PM GMT)

மண்ணச்சநல்லூர் அருகே அரசு பஸ் வாய்க்காலில் கவிழ்ந்து டிரைவர் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

சமயபுரம்,

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை எடப்பாடி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீரங்கன் (வயது 42) ஓட்டி வந்தார். கண்டக்டராக கோவிந்தராஜ் (52) பணியில் இருந்தார். இந்த பஸ்சில் 33 பயணிகள் இருந்தனர்.

பஸ் நேற்று அதிகாலை திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நொச்சியம் அடுத்த ரெட்டைமண்டபம் என்ற இடம் அருகே வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த அய்யன்வாய்க்காலில் கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டனர். இந்த சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த கும்பகோணம் அருகே உள்ள காந்திபேட்டையை சேர்ந்த பாப்பாத்தி (70), குமார் (45), செல்வம் (35), ஜெயலட்சுமி (52), குமார் (36) ராஜா (48) மற்றும் பஸ் டிரைவர் ஸ்ரீரங்கன், கண்டக்டர் கோவிந்தராஜ் ஆகிய 8 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாய்க்காலில் கவிழ்ந்து கிடந்த பஸ்சை கிரேன் மூலம் மீட்டனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story